பணத்தை திருப்பித் தர மறுப்பு... தலைவரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற நெல்லை அ.தி.மு.க பிரமுகர் கைது
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் தென்சாசியில் கொடுத்த பணத்தை திருப்பித்தர மறுத்த கூட்டுறவு பண்டகசாலை சங்கத் தலைவரை கண்டித்து, அ.தி.மு.க. பிரமுகர் தீ குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அ.தி.மு.க.வின் வட்ட செயலாளராகவும், தென்காசி கூட்டுறவு பண்டகசாலை சங்க உறுப்பினராகவும் உள்ளார். இவர் அப்பகுதியில் டாஸ்மாக் பார் நடத்த லைசன்ஸ் பெற்றுத்தருவதற்காக, கூட்டுறவு பண்டகசாலை சங்கத்தின் தலைவரிடம் 75,000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் வெகு நாட்கள் ஆகியும் அருணாச்சலத்திற்கு பார் நடத்தும் உரிமை கிடைக்காததால், சங்கத் தலைவரிடம் கொடுத்த பணத்தை திரும்பிக் கேட்டுள்ளார். ஆனால் சங்கத் தலைவர் பணத்தை திருப்பிக்கொடுக்க மறுத்தால் மனம் உடைந்த அருணாச்சலம், தென்காசி கூட்டுறவு பண்டகசாலை சங்க அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயன்றார். அவரை அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீக்குளிக்க முயன்ற குற்றத்திற்காக அருணாச்சலத்தை கைது செய்தனர்.