உள்ளாட்சி இடைத்தேர்தல்: தூத்துக்குடி, மேயர் பதவிகளை வென்ற அதிமுக- 4 நகராட்சிகளையும் கைப்பற்றியது
கோவை/தூத்துக்குடி: தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் அந்தோணி கிரேஸி பாஜக வேட்பாளரை விட 84885 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கோவை மேயர் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 2,91,343 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மேயர் உட்பட 530 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 307 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் வரை நடைபெற்றது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் அதிமுக வெற்றி
தூத்துக்குடி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி கிரேஸி வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி, 1,16,693 வாக்குகள் பெற்றார் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி 31708 வாக்குகள் பெற்றுள்ளார். மொத்தம் 84885 வாக்கு வித்தியாசத்தில் அந்தோணி கிரேஸி வெற்றி பெற்றுள்ளார்.
கோவையில் அதிமுக வெற்றி
கோவை மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் 4,20,104 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் நந்தகுமார் பெற்ற வாக்குகள் 1,28,761. சி.பி.எம். வேட்பாளர் 31,965 வாக்குகள் பெற்றார். 2,91,343 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அதிமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார்.
கடலூரில் குமரன்
கடலூர் நகரசபை தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் குமரன் பாஜக சார்பில் துறைமுகம் செல்வராஜ் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாதவன், சுயேட்சை வேட்பாளராக ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் அ.தி.மு.க. வேட்பாளர் குமரன் 65 ஆயிரத்து 550 வாக்குகளும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் 6 ஆயிரத்து 239 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 4 ஆயிரத்து 954 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன் மூலம் அ.தி.மு.க. வேட்பாளர் குமரன் 57 ஆயிரத்து 311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விருதாச்சலம் அருளழகன்
விருத்தாசலம் நகரசபை தலைவராக இருந்த ஆர்.டி. அரங்கநாதன் மரணம் அடைந்ததையொட்டி அப்பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. சார்பில் அருளழகன், பாரதீய ஜனதா சார்பில் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். அ.தி.மு.க. வேட்பாளர் அருளழகனுக்கு 29 ஆயிரத்து 148 ஓட்டுகளும், பாரதீய ஜனதா வேட்பாளர் சரவணனுக்கு 3 ஆயிரத்து 651 வாக்குகளும் கிடைத்திருந்தன. இதன்மூலம் அ.தி.மு.க. வேட்பாளர் அருளழகன் 25 ஆயிரத்து 497 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
ராமநாதபுரம், அரக்கோணம்
ராமநாதபுரம் நகரசபை தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் சந்தானலட்சுமியும், பா.ஜனதா சார்பில் துரைக்கண்ணனும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்தானலட்சுமி 20554 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் துரைக்கண்ணன் 7 ஆயிரத்து 385 வாக்குகள் பெற்று தனது டெபாசிட்டை தக்க வைத்துக்கொண்டார்.
அரக்கோணம் நகரசபை தலைவர் பதவி தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் கண்ணதாசன் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள்
கோவையில் சூலூர், இருகூர் ஆகிய இரண்டு பேரூராட்சிகளை அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது. இதேபோல், ஊராட்சி உறுப்பினர் பதவிகள், பஞ்சாயத்துத் தலைவர் தலைவர் உள்ளிட்ட பெரும்பாலான உள்ளாட்சிப் பதவிகளில் அ.தி.மு.க.வினரே வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற அதிமுகவினர்
மேலும், தூத்துக்குடி காயல்பட்டினம் நகராட்சி 1வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் அஷ்ரப் வெற்றி பெற்றுள்ளார். அச்சரப்பாக்கம் பேரூராட்சி 13வது வார்டில் அ.தி.மு.க.வின் மெய்யப்பனும், அரியலூர் நகராட்சி 13வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் மல்லிகா 536 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி 37வது வார்டில் அ.தி.மு.க.வின் மாரிமுத்து 2,604 வாக்குகள் பெற்று வெற்றி. விருதுநகர் நகராட்சி 10, 21, 34வது வார்டுகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
அதிமுகவினர் வெற்றி
திருச்சி மாநகராட்சி 32வது வார்டில் சங்கர் அ.தி.மு.க. 1,640 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஈரோ மாநகராட்சி 60 வது வார்டு அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன் வெற்றி. ஊத்தங்கரை பேரூராட்சி 13 வது வார்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மடத்குளம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பழனிச்சாமி 7,434 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். திருமுருகன் பூண்டி பேரூராட்சி தலைவர் பதவி அதிமுகவின் 8117 வாக்கு வித்தியாசத்தில் பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார்.