'அடங்கா அக்கப்போர்': தனிக்கட்சி தொடங்குவதாக வதந்தி பரப்புகின்றனர்- கார்த்தி சிதம்பரம்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்க இருப்பதாக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரசை விட்டு ஜி.கே.வாசன் வெளியேறி தனிக் கட்சி தொடங்கியதும் காங்கிரசில் ப. சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதனால் ப.சிதம்பரம் அதிருப்தியடைந்தார்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் பதவியையாவது பெறலாம் என்று எதிர்பார்த்த கார்த்தி சிதம்பரத்துக்கு அந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.
இது ப.சிதம்பரம் ஆதரவாளர்களை மேலும் விரக்தியடையச் செய்தது. இதன் வெளிப்பாடாகத்தான் சிதம்பரம் ஆதரவாளராக இருந்து வந்த செல்வப்பெருந்தகை இப்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் நெருக்கமாகியுள்ளார்.
மேலும் கார்த்தி சிதம்பரம் கடந்த 22-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியதற்கு நோட்டீஸ் அளித்ததோடு மட்டுமில்லாமல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளிப்படையாக விமர்சித்தது ப. சிதம்பரத்தை அதிருப்தியின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இந்தப் பின்னணியில்தான் வாசனை ப.சிதம்பரம் சந்தித்தார் என்றும், தமிழ் மாநில காங்கிரஸில் இணையப் போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் ப.சிதம்பரத்தை முதல்வர் வேட்பாளராக்கினால் காங்கிரஸ் கட்சிக்காரனே ஓட்டுப் போடமாட்டான் என்று இளங்கோவன் பேசியதால் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என்றும் தகவல்கள் கிளம்பியுள்ளன. ஆனால் இதனை மறுத்துள்ள கார்த்தி சிதம்பரம், தனிக்கட்சி தொடங்குகிறோம் என்று வேண்டுமென்றே சிலர் வதந்தி கிளப்பி வருகிறார்கள். இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல்.
இதனை மறுப்பதோடு வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் கட்சி காங்கிரஸ்தான். அதைவிட்டு விலக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார்.