சென்னை: பாலத்தின் மீதிருந்து குதித்து பெண் தற்கொலை... காதலன் கைது!
சென்னை: சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோடம்பாக்கம், காமராஜர் கிழக்கு தெருவில் வசித்து வந்தவர் அஞ்சலி (26). மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் புதனன்று மாலை சென்னை, அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அவரது காதலர் புவனேஸ்வர் அங்கு வந்து கதறி அழுதார்.
தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சிவபாஸ்கர், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட அஞ்சலியின் காதலன் புவனேஸ்வரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது புவனேஸ்வர் கூறியதாவது:
''அஞ்சலி திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர். அவருக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. சென்னை, கொரட்டூரில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் அவரை அதே கட்டிடத்தில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நான் சந்தித்தேன். பின்னர் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம்.
இந்த நிலையில், எனக்கு ஊரில் பெண் பார்த்தார்கள். ஆனால், அஞ்சலி தன்னை 2வது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். நான் அதை ஏற்கவில்லை. 'எனக்கு திருமணம் நடந்தாலும் சென்னையில் நாம் ஒன்றாக இருப்போம்' என்றேன். அதை அஞ்சலி ஏற்காமல் தற்கொலை செய்து கொண்டார்'' என வாக்குமூலம் அளித்தார்.
புவனேஸ்வர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம், காதலன் தூண்டுதலால் அஞ்சலி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து புவனேஸ்வரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 306வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.