அர்னால்டுக்கு ரூ. 10 கோடி... வேலை பார்த்த டெக்னீஷியனுக்கு பெப்பே.. இதான் 'ஐ' பிரமாண்டம்!
ஐ படம் குறித்து அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அடித்துவிடும் பிரமாண்ட செய்திகள், கேட்பவரை மிரளவெல்லாம் வைக்காது.. மாறாக கவுண்டர் சொல்வாரே..'அடங்கபா.. ரீல் அந்துப் போச்சி'ன்னு.. அப்படித்தான் சொல்ல வைக்கும்.
இந்தப் படத்தை சீனாவில் 15000 அரங்குகளில் (பதினைந்தாயிரம்) வெளியிடுவேன் என்று அவர் சொன்னபோதே நிருபர்கள் சுதாரித்திருக்க வேண்டும். சரி, அறுத்துப் போட்டா வெள்ளாமைக் கணக்கு வெளிச்சமாகிடப் போகுது...
படத்தின் பிரமாண்ட செய்திகள், விளம்பரங்களுக்குப் பின்னால் உள்ள பிரமாண்ட சோகம் ஒன்றைச் சொல்கிறோம்.
ரூ 180 கோடியில் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் ஐ படத்தின் டெக்னீஷியன்களுக்கு கணிசமான தொகையை பாக்கி வைத்திருக்கிறார்களாம்.
ஷங்கருக்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ 50 கோடி, ஹீரோ, ஹீரோயின் மட்டும் டெக்னீஷியன்களுக்கு 50 கோடி, படப்பிடிப்பு, பப்ளிசிட்டிக்கு எண்பது கோடி என கணக்குச் சொல்கிறார்கள்.
ஆனால் விசாரித்தால், டெக்னீஷியன்களுக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. படம் பற்றி விசாரிப்போரிடமெல்லாம், முதலில் சொல்வது இந்தக் குற்றச்சாட்டைத்தானாம்.
அதே போல நாயகி எமி ஜாக்ஸனுக்கு சம்பள பாக்கி இருப்பதால், கோபத்தில் அவர் ஒரு பாடலில் நடிக்க மறுத்து லண்டன் கிளம்பிவிட்டார். அந்தப் பாட்டுக்காக போடப்பட்ட காஸ்ட்லி செட், பிரசாத் ஸ்டுட்யோவில் வீணாகிக் கொண்டிருக்கிறதாம்.
இதை விட முக்கியமானது, படத்தின் இசை வெளியீட்டுக்கு சென்னை வரும் அர்னால்டுக்கு அளிக்கப்பட்ட தொகை. அவரது அறக்கட்டளைக்கு ரூ 10 கோடி கொடுத்து அவரை வரவழைக்கிறார்கள். ஜாக்கிசானும் வருவதாகச் சொல்கிறார்கள். அவருக்கு எத்தனை கோடிகளோ!