ஓட்டுக்கு ரூ.3000… அதிமுகவினர் பணம் கொடுத்தாலும் திமுகதான் ஜெயிக்கும்: ஸ்டாலின்
சென்னை: அதிமுகவினர் தோல்விபயம் காரணமாக தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்கின்றனர். அவர்கள் பணம் கொடுத்தாலும், திமுகதான் ஜெயிக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கூறியதாவது,
ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. தோல்வி பயம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்ய ஏதுவாக ஒரு ஓட்டுக்கு ரூ 3000 வீதம் ஒவ்வொரு தொகுதிக்கும் பணம் போயிருக்கிறது. இரண்டு நாட்களாக வாக்களர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.
காவல்துறை துணையோடு…
காவல்துறை இதற்கு முழுக்க முழுக்க துணை போகிறது. எங்கள் வேட்பாளர்கள், கழகத் தோழர்கள், வழக்கறிஞர்கள் புகார் கொடுத்தாலும் அது பற்றி நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. காவல்துறையினர் மட்டுமல்ல தொகுதிகளில் உள்ள தேர்தல் பார்வையாளர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை. நடவடிக்கை எடுக்கவே தயங்குகிறார்கள்.
புகார் கொடுத்தும்…
அதனால் நேற்றைய தினம் எங்கள் வேட்பாளர்கள் தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், கிரிராஜன் ஆகியோர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரைச் சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
144 ஏன் தெரியுமா?
வேடிக்கை என்னவென்றால் ஆளுங்கட்சியினர் பணம் கொடுப்பதை எதிர்கட்சியினர் தடுக்கக் கூடாது என்பதற்காக 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்கள். தி.மு.க.வினர் ஐந்து பேர் போனால் நடவடிக்கை அ.தி.மு.க.வினர் எத்தனை பேர் போனாலும் பரவாயில்லை என்ற நிலையை தேர்தல் கமிஷன் உருவாக்கியிருக்கிறது.
எங்களை தடுக்கவே 144
ஓட்டுக்காக பணம் கொடுக்கப்படுவதை காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. எங்கள் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுப்பார்கள் என்பதற்காக 144 தடையுத்தரவு போடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேர்தல் நேரத்தில் 144 தடையுத்தரவு போடப்பட்டிருப்பது ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார்
ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்கவும், அதைத் தடுக்கும் எதிர்கட்சிகளை முடக்கவும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளோம்.
நாங்கள் தடுப்போம்
உரிய நடவடிக்கை தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று இன்னும் நம்புகிறேன். அப்படி நடவடிக்கை எடுக்கத் தவறினால், பணம் பட்டுவாடா இன்றும் தொடர்ந்தால் எப்படிப்பட்ட தடையுத்தரவுகள் போடப்பட்டிருந்தாலும் அதையும் மீறி பணம் வழங்கப்படுவதை எங்கள் கழகத்தினர் தடுப்பார்கள்.
போலீசார் அஞ்சுகின்றனர்
பொறுப்பில் இருக்கும் எங்களைப் போன்றவர்களே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளோம். ஏனென்றால் இன்னும் இரண்டு வருடங்கள் அ.தி.மு.க. ஆட்சியிலிருக்கப் போகிறது என்பதால் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப் பயப்படுகிறார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.