அதிமுகவுக்கு லோக்சபா துணை சபாநாயகர் பதவி- ஏற்பது குறித்து ஜெ. தீவிர ஆலோசனை!
சென்னை: லோக்சபா துணை சபாநாயகர் பதவியை அதிமுகவுக்கு தர பாரதிய ஜனதா முன்வந்துள்ளது. ஆனால் இதை ஏற்பது குறித்து அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
லோக்சபாவில் அதிமுகவுக்கு 37 எம்.பிக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியோ எதிர்க்கட்சி அந்தஸ்துக்காக போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் பதவியை அதிமுகவுக்கு தருவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்வந்துள்ளது.
பாஜகவின் கணக்கு
இதை அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி அதிமுகவுக்கு துணை சபாநாயகர் பதவி கொடுப்பதன் மூலம் லோக்சபாவில் எதிர்க்கட்சிகளை பிரிக்க முடியும் என்பதுடன் அதிமுகவுடன் இணக்கமான உறவை தொடர முடியும் என்பது பாஜகவின் கணக்கு.
ஆலோசித்து முடிவு
ஆனால் உடனே இதற்கு ஜெயலலிதா பதிலளிக்காமல் ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறியுள்ளார்.
தம்பிதுரை
அப்படி லோக்சபா துணை சபாநாயகர் பொறுப்பை ஏற்பது என்று அதிமுக முடிவு செய்தால் தம்பிதுரையைத்தான் ஜெயலைதா பரிந்துரைக்க கூடும்.
வேறு இருவருக்கு வாய்ப்பு
ஆனால் தம்பிதுரை துணை சபாநாயகரானால் அதிமுகவின் கருத்துகளை லோக்சபாவில் வலுவாக முன்வைக்கக் கூடிய தலைவரை அதிமுக இழந்துவிடும். இதனால் திருவள்ளூர் வேணுகோபால் அல்லது திருச்சி குமார் ஆகியோரில் ஒருவரை துணை சபாநாயகர் பதவிக்கு ஜெயலலிதா பரிந்துரைக்கலாம்.
சாதக பாதகங்கள்
ஆனால் லோக்சபா துணை சபாநாயகர் பதவியை ஏற்பதால் அரசியல் ரீதியான சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவை பாஜக மேலிடத்துக்கு ஜெயலலிதா தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.