அதிமுக செல்வாக்கு சரிகிறது, 22 இடங்களே கிடைக்கும்- பாஜக கூட்டணிக்கே 3 தான்- திமுகவுக்கு 14!
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக 22 தொகுதிகளிலும் திமுக 14 தொகுதிகளிலும் வெல்லும் என்று என்.டி.டி.வி. தொலைகாட்சியின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில் இம்மாதத்தின் முதல்பகுதியில் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை என்.டி.டி.வி. வெளியிட்டுள்ளது.
அதிமுகவுக்கு 22
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக 22 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்.
13 தொகுதிகள் கூடுதலாக...
கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் அதிமுகவுக்கு 13 தொகுதிகள் கூடுதலாகும். ஆனால், 40க்கு 40 இடங்களைக் கைப்பற்றும் என சில மாதங்களுக்கு முன் கருதப்பட்ட அதிமுகவின் செல்வாக்கு அடுத்தடுத்த கருத்துக் கணிப்புகளில் 35, 30 என சரிந்து இப்போது 22 தொகுதிகள் என்ற நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுகவுக்கு 14
அதே நேரத்தில் திமுகவுக்கு 14 தொகுதிகளில் வெற்றி கிடைக்குமாம். கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் திமுகவுக்கு 5 தொகுதிகள் குறைவாகும். அதே நேரத்தில் இந்தத் தேர்தலில் திமுக முட்டை வாங்கும் என்று கருதப்பட்டது. பின்னர் வந்த கருத்துக் கணிப்புகள் 5 இடங்கள் வரை கிடைக்கும் என்றன. பின்னர் அது 10 ஆனது. இப்போது 14 இடங்கள் வரை கிடைக்கும் என்கிறது என்டிடிவி. இது திமுகவே எதிர்பாராதது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணிக்கே 3 தான்...
விஜய்காந்தின் தேமுதிக, ராமதாசின் பாமக, வைகோவின் மதிமுக என பல கட்சிகளை இணைத்துக் கூட்டணி கண்ட பாஜக கூட்டணிக்கே மொத்தம் 3 தொகுதிகள் தான் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. இதன்மூலம் இந்தக் கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்பது தெளிவாகிறது என்கிறது என்டிடிவி. கூட்டணியில் 4 கட்சிகள் உள்ள நிலையில் ஆளுக்கு ஒன்று என்றாலும் 4 இடங்கள் வர வேண்டும். 3 இடங்கள் தான் என்றால் ஏதோ ஒரு கட்சி முட்டை வாங்கப் போகிறது என்றே அர்த்தம், இந்தக் கருத்துக் கணிப்பு உண்மையானால்...
காங்கிரஸுக்கு முட்டை தான்
காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பில்லையாம். இதை கருத்துக் கணிப்பு நடத்தித் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஞானதேசிகனும் நடிகர் கார்த்திக்கும் இணைந்து நிற்கும் படத்தைப் பார்த்தாலே சொல்லி விடலாம்!