ரேசன் கடையை தவிர எல்லா கடைகளையும் மூடுவோம்: அன்புமணி பேச்சு
தருமபுரி: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடைகளை தவிர அனைத்து கடைகளையும் மூடிவிடுவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ், அத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:
நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவும் பயன்பெற 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டுவந்தேன். இத்திட்டத்தால் பெரிதும் பயனடைந்தது தாய்மார்கள்தான். ஆம்புலன்சை வரவழைக்க தொலைபேசி அழைப்பு செய்ததில் 24 சதவீதம் பிரசவம் தொடர்பானது.
அதற்கு அடுத்தபடியாக 21 சதவீதம்தான் சாலை விபத்துக்கு உதவிகோரிய அழைப்புகள். இதை தாய்மார்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும். ரேசன் கடைகளை தவிர அத்தனை கடைகளும் மூடப்படும். தாய்மார்கள் இதற்காகவே எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.