தர்மபுரி: பணம் பட்டுவாடா... போலீசுக்கு பயந்து ஓடிய அதிமுக தொண்டர் கிணற்றில் விழுந்து பலி
தர்மபுரி: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தவர்களைப் போலீசார் துரத்தியதில் கிணற்றில் விழுந்து அதிமுக கட்சித் தொண்டர் ஒருவர் பரிதாபமாகப் பலியானார்.
நேற்று முன்தினம் இரவு தர்மபுரித் தொகுதியில் கிருஷ்ணபுரம் அருகே உள்ள எம்கே புதூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் வாக்களிப்பதற்காக பணப் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிற்து. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பணம் பட்டுவாடா செய்தவர்கள் சிதறி ஓடினர். அவர்களை விரட்டிப் பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். அப்போது அக்கூட்டத்தில் இருந்த 22 வயது வினோத் குமார் என்ற வாலிபர் இருளில் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்குமார் இளைஞர் காவல் படையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.