தமிழ்நாட்டிலுள்ள ஐடி நிறுவனங்களை ஈர்க்க ஆந்திரா அதிரடி திட்டம்! முதலீட்டாளர்களுடன் திடீர் சந்திப்பு!
சென்னை: தமிழகத்தில் இருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு. ஐடி மற்றும் எலக்ட்ரானிக் துறையில் ஆந்திரா நடப்பாண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க உள்ளது.
சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக பதவி வகித்தபோது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வெகுவாக ஈர்த்து ஹைதராபாத்தை அம்மாநில தகவல் தொழில்நுட்ப தலைநகரமாகவும் உருமாற்றினார். பெங்களூருக்கு அடுத்தபடியாக ஐடி துறையில் ஹைதராபாத் அப்போது பெரும் பெயர் ஈட்டியது.
ஐடி தலைநகராகுமா திருப்பதி
தற்போது ஆந்திரா இரண்டாவது பிரிக்கப்பட்ட நிலையில் ஆந்திர முதல்வராக அதே சந்திரபாபு நாயுடு அடியெடுத்து வைத்துள்ளார். ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு சென்றுவிட்டதால் இப்போது சந்திரபாபு நாயுடுவின் நோக்கம் புதிதாக ஒரு ஐடி நகரை உருவாக்குவது. இதற்காக சந்திரபாபு நாயுடு தெற்கு ஆந்திராவை தேர்ந்தெடுத்துள்ளார். சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவேயுள்ள திருப்பதி அல்லது சித்தூரை தொழில் நகரமாக உருமாற்றுவது நாயுடுவின் திட்டம்.
வசதி அதிகம்
சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய பெருநகரங்களிலுள்ள விமான நிலையங்கள், ரயில் பாதை, சாலை வசதி, சென்னையின் துறைமுகம் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளவும், குவிந்துள்ள தொழிலாளர்களை ஈர்க்கவும் தென் ஆந்திரமே சரியான இடமாக இருக்கும் என்பது சந்திரபாபு நாயுடுவின் திட்டம். மேலும் சென்னை, பெங்களூரை ஒப்பிட்டால் நிலம், அலுவலக வாடகை போன்றவையும் இங்கு குறைவாக இருக்கும்.
ஹீரோ நிறுவனத்தை ஈர்த்த ஆந்திரா
இதன் ஒரு பகுதியாக, கர்நாடகாவின் தார்வாடில் அமைய இருந்த ரூ.2200 கோடி மதிப்பிலான ஹீரோ பைக் நிறுவன உற்பத்தி பிரிவை சித்தூருக்கு ஈர்த்துவிட்டார் சந்திரபாபு நாயுடு. அதேபோல தமிழகத்திலுள்ள ஐடி நிறுவனங்கள் மீதும் ஆந்திர அரசின் பார்வை விழுந்துள்ளது. லஞ்சம், இடையூறு போன்றவற்றால் சிக்கியுள்ள தமிழக தொழிலதிபர்களை ஆந்திரா பக்கம் இழுக்க முடிவு செய்து சென்னையில் முதலீட்டாளர் கூட்டத்தையும் ஆந்திர தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பாலி ரகுநாத ரெட்டி நடத்திவிட்டார்.
தமிழக தொழிலதிபர்களுடன் கூட்டம்
ஆந்திர தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பாலி ரகுநாத ரெட்டி, தலைமையில் அம்மாநில மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் தொழில் ஆலோசகர்கள் பங்கேற்ற கூட்டம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட, முதலீட்டாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறை குறித்து, 25 பக்கம் கொண்ட கொள்கை விளக்கப் புத்தகம், முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும், கொள்கை விளக்க குறும்படமும், முதலீட்டாளர்களுக்கு திரையிடப்பட்டது.
எப்போ வேண்டும்னாலும் கூப்பிடுங்கள்..
இந்த கூட்டத்தில் வழவழ என்று தனது மாநில முதல்வரின் பெருமையை பேசிக்கொண்டு நேரத்தை வீண் செய்யாத, பாலி ரகுநாத ரெட்டி, மிகச் சுருக்கமாக அறிமுக உரையாற்றிவிட்டு முதலீட்டாளர்கள் ஒருவருக்கொருவர் கலந்துரையாட முக்கியத்துவம் அளித்துள்ளார். இரவு, 7.15 மணிக்கு துவங்கிய கூட்டம் சரியாக, 9.00 மணிக்கு முடிக்கப்பட்டுள்ளது. பாலி ரகுநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள், தங்கள் மொபைல்போன் எண் மற்றும் இணையதள முகவரியைக் கொடுத்து, எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்று தொழிலதிபர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
குறைந்த விலையில் நிறைய நிலம்
முக்கியமான சில வாக்குறுதிகளை தமிழக தொழிலதிபர்களுக்கு ஆந்திர குழு அளித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறையில் நடப்பாண்டில், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை எதிர்பார்க்கிறோம், தொழில் துவங்க தேவையான நிலம் குறைந்த விலையில் உடனடியாக அளிக்கப்படும், அனந்தப்பூரில், 8,000 ஏக்கரும், விசாகப்பட்டினத்தில் அலுவலகப் பயன்பாட்டுக்கான மிகப்பெரிய வளாகமும் தயாராக உள்ளது, அத்தியாவசிய சட்டத்தில் ஐ.டி., மற்றும் மின்னணுவியல் துறை கொண்டு வரப்பட்டதால், நடைமுறையில் இருந்த சட்ட கெடுபிடிகள் நீக்கப்படும்.
தடையற்ற மின்சாரம் தாரோங்க..
தடையற்ற, 24 மணி நேர மின்சாரம் வழங்கப்படும், ஒற்றை சாளர முறையில் தொழில் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், ஆந்திர தலைநகரை நோக்கி, முதலீட்டாளர்கள் வர வேண்டிய அவசியமில்லை, திருப்பதி, அனந்தப்பூர், விஜயவாடா, விசாகப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் உள்ள அதிகாரிகளை அணுகினால் போதும். எந்தத் தேவையாக இருந்தாலும், இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொண்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், ஆந்திரா மற்றும் மத்திய அரசு இடையே நல்லுறவு நீடிப்பதால் கூடுதல் பலன் கிடைக்கும். இதுபோன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கு கடைசி இடம்
ஏற்கனவே கோவையில் கர்நாடக முதல்வர் நடத்திய முதலீட்டாளர்களுடனான சந்திப்பால் சில நிறுவனங்கள் கர்நாடகாவுக்கு சென்றதாக கூறப்பட்டது. தமிழகம் தொழில் துறை வளர்ச்சியில் நாட்டிலேயே கடைசி இடத்தை பிடித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்களின் இந்த அதிரடி நடவடிக்கைகள் பணியாற்றும் மற்றும் பணி தேடும் இளைஞர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.