நேபாளம் செல்ல உதயகுமாருக்கு தடை விதிப்பதா? அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்
நெல்லை: நேபாளம் செல்வதற்கு எஸ்.பி உதயகுமாருக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு சமம் என்றும் அந்த இயக்கத்தினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை :
நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டு நகரில் நடைபெற இருக்கும் மனித உரிமை மீறல் பற்றிய கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில், அரசு நடத்திய மனித உரிமை மீறல்களை பற்றி தெரிவிப்பதற்காக, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு சென்றார்.
டெல்லியில் இருந்து காத்மண்டு செல்ல உதயகுமாருக்கு நேற்று மதியம் 03.00 மணி விமானத்திற்கு பயணசீட்டு எடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் உதயகுமார் விமானம் ஏற அங்கிருந்த அதிகாரிகளால் அனுமதிக்கப்படவில்லை உதயகுமார் காத்மண்டு செல்ல வேண்டிய விமானம் மதியம் 03.00 மணிக்கு புறப்பட்டு சென்று விட்டது.
உதயகுமார் என்ன செய்வது என முடிவு எடுக்காத நிலையில் தற்போது அவரது பயணத்தை தடை செய்து டெல்லி விமான நிலையத்தில் இமிக்கிரேசன் அலுவலகத்தில் டெல்லி காவல்துறை அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளார்.
உதயகுமார் பயணத்தை தடை செய்து இருப்பது என்பது அப்பட்டமான அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக உரிமை பறிப்பாகும்.
ஜனநாயக உரிமை பறிப்பை செய்துள்ள இந்திய அரசையும் , தமிழக அரசையும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜனநாயக உரிமை பறிப்பை செய்து, கூடங்குளம்
அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில், அரசு நடத்திய, காவல்துறை நடத்திய கொடுமையான மனித உரிமை மீறல்களை உலகின் முன் கொண்டு செல்ல தடை ஏற்ப்படுத்தியுள்ள இந்திய அரசையும் , தமிழக அரசையும் கண்டிக்க வேண்டுமாய் அனைத்து அரசியல் கட்சிகள், போராட்டக் குழுக்கள், ஜனநாய சக்திகள், மக்கள் இயக்கங்கள் மக்களை நேசிக்கும் அனைவரையும் போராட்டக் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
அரசு உடனடியாக உதயகுமார் அவர்களை காட்மண்டு அனுப்பி வைத்து மனித உரிமை மீறல் பற்றிய கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். போராட்டக் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.