ஜெ. வருகிறார்.. மதுரையில் கோலாகலம்.. முல்லைப் பெரியாறு அணை "கட்டும்" பணி தீவிரம்!
மதுரை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் மற்றும் அதிமுக சார்பில் நாளை மதுரையில் நடைபெறவுள்ள பிரமாண்ட மாநாட்டுக்கான அதி பிரமாண்டமான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா பேசும் மேடையில் முல்லைப் பெரியாறு அணையின் பிரமாண்ட மாதிரியை கட்டி வருகிறார்கள்.
முதல்வர் விழாவுக்காக மேடை அமைக்கும் பணி, பந்தல் போடும் பணி, கட் அவுட்கள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது, தோரண வாயில் அமைப்பது, புதிய சாலை போடுவது, ஹெலிபேட் அமைப்பது என பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்து வருகின்றன.
142 அடியாக உயர்த்தியதற்காக
முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாளை மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு அருகே பாராட்டு விழா நடைபெறுகிறது.
100 ஏக்கர் பரப்பளவில்
விழாவையொட்டி 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானம் முழுவதும் செம்மண் கொட்டப்பட்டு பள்ளம் மேடுகள் சீர்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது ஜெயலலிதா பேசினார். அதற்காக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு தளம் தற்போது தூர்ந்து விட்டது. இதனால் ஜேசிபி இயந்திரம் மூலம் சீர் செய்து ஹெலிபேடு தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புத்தம் புது சாலை...!
மேலும் ஹெலிபேடு தளத்தில் இருந்து விழா மேடைக்கு முதல்வர் வரும் வழி நெடுகிலும் புதிய தார் ரோடு போடப்பட்டுள்ளது. வண்ணமிகு தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பந்தல் அமைக்கும் இடம் ஹெலிபேடு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கலவரப்படுத்தும் கருமேகம்...
மதுரையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் கருமேக மூட்டம் காணப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா மாலை 4 மணிக்கு இவ்விழாவில் கலந்து கொள்வதால் மழை பெய்து விழா பாதிப்பு ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும்,விவசாயிகள்,கட்சி தொண்டர்கள் அமரும் வகையில் சுமார் 2 ஆயிரம் அடி நீளத்திற்கும், 70 அடி அகலத்தில் தகர பந்தல் மின் விசிறியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேடையில் முல்லைப்பெரியாறு அணை
மேடையில் முல்லைப் பெரியாறு அணையின் படம் பின்புலத்தில் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. விழா மைதானத்தின் அருகே உள்ள ரிங் ரோட்டில் தோரண வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கும் கட் அவுட்
மேலும், விழா நடைபெறும் ரிங் ரோட்டின் ஓரத்தில் சுமார் 60 அடி உயரத்தில் அணையின் மாதிரி கட்அவுட் செட் அமைக்கப்பட்டுள்ளது.
இரு பக்கமும் அலங்கார தட்டிகள்
சாலையின் இரு பகுதியிலும் அலங்கார தட்டிகள் கட்டப்பட்டுள்ளது. ரிங் ரோடு, சிவகங்கை ரோடு, மாட்டுத்தாவணி, பாண்டிகோவில், கோரிப்பாளையம், அழகர்கோவில் ரோடு, செல்லூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளின் இருபுறமும் வரவேற்பு பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
செல்லூர் ராஜு தலைமையில்
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு வருகிறார். மேலும் விழா நடைபெறும் மேடை அருகே மின்சார வசதிக்காக டிரான்ஸ்பார்மரும் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கு அழைப்பு
இந்த நிலையில், விழா அழைப்பிதழை மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துக் கொடுத்துள்ளனர்.