காற்றாலை மின்சாரம் அதிகரிக்குமா? வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் மின்வாரியம்!
சென்னை: செப்டம்பர் மாதம் வந்து விட்டாலே தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கஷ்ட காலம்தான்.
காரணம், இந்த காலகட்டத்தில் காற்றின் மூலம் கிடைக்கும் மின்சாரம் குறைந்து விடும். இதனால் மின் விநியோகம் கடும் பாதிப்பை சந்திக்கும்.
தற்போது காற்றாலைகள் மூலம் கிடைத்து வரும் மின்சாரத்தின் அளவும் குறைந்து வருவதால் மின்வாரியம் நிலைமையைச் சமாளிப்பது குறித்த கவலையில் மூழ்கியுள்ளது.
மின்சாரம் குறைபாடு:
காற்றாலை மின்சாரம் குறைந்திருப்பதால் அடுத்து அனல் மின் நிலைய மின்சாரத்தை மட்டுமே பெரிய அளவில் இருக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏர்ப்டுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு:
அதேசமயம் பல அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால் மின்வாரியத்தின் நிலைமை மோசமாகியுள்ளது.
முயற்சிக்கு சிக்கல்:
தமிழகத்தில் மின் நிலைமை மோசமாக இருப்பதால் வட மாநிலங்களிலிருந்து மின்சாரத்தைப் பெறும் முயற்சியில் தமிழகம் இறங்கியுள்ளது. ஆனால் இங்கும் ஒரு சிக்கல் வந்துள்ளது.
வர முடியாத நிலை:
தெலுங்கானா, ஆந்திராவுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக சோலாப்பூர் - ராய்ச்சூர் மின் வழிப் பாதையை மத்திய மின்சார ஆணையம் ஒதுக்கிக் கொடுத்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு இந்தப் பாதையில் மின்சாரத்தைக் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாட்டும் மின்வெட்டு:
மின் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெ்ட்டு வாட்டி வதைத்து வருகிறது.
கடந்த ஆண்டைவிட அதிகம்:
அதேசமயம், காற்றாலை மின்சாரமானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாகவே கிடைத்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள். மேலும் விரைவில் சில அரசு மற்றும் தனியார் அனல் மின் நிலையங்கள் தொடங்கப்படவுள்ளதால் நிலைமை மேம்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அக்டோபரில் தொடக்கம்:
கோஸ்டல் எனர்ஜென் என்ற நிறுவனம் தூத்துக்குடியில் 600 மெகாவாட் மின் நிலையத்தைத் தொடங்கவுள்ளது இந்த நிறுவனம் அக்டோபரில் தனது மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்த நிறுவனத்தின் கழிவு நீரால் புற்று நோய் பரவி வருவதாக ஒரு பெரும் சர்ச்சை உள்ளது.
500 மெகாவாட் மின்சாரம்:
அதேபோல கூடங்குளம் முதலாவது யூனிட்டில் தற்போது பராமரிப்பு நடந்து வருகிறது. அது முடிந்தவுடன் அங்கு 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காத்திருக்கும் அதிகாரிகள்:
வல்லூரில் 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3வது யூனிட் மீதும் அதிகாரிகள் நம்பிக்கை வைத்துள்ளனர். இப்படி பல்வேறு வழிகளை நம்பி மின்வாரிய அதிகாரிகள் மின்சார விநியோகத்தை சிறப்பாக செய்ய காத்துள்ளனர்.