"கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து".. பறிமுதல் செய்து வண்டலூர் "ஜூ"வில் ஒப்படைக்கப்பட்ட ஜோசியக் கிளி!
சென்னை: சென்னையில் தடையை மீறி கிளி ஜோசியம் பார்த்த ஜோசியரிடம் இருந்து கிளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வானில் சிறகடித்துப் பறக்கவேண்டிய பச்சைக் கிளிகளை வீட்டில் வைத்து வளர்ப்பதும், ஜோசியம் பார்க்க பயன்படுத்துவதும் மிகப்பெரிய குற்றம் என்ற சட்டமே உள்ளது.
அதனை மீறி கிளிகளை வளர்த்தாலோ, ஜோசியத்திற்கு பயன்படுத்தினாலோ அவர்கள் மீது கால்நடைகள் துயர் தடுப்புக்கழகம் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், அக்கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்படும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் கிளி ஜோசியம் பார்க்கப்படுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கால்நடைகள் துயர் தடுப்புக் கழகம் சார்பில் 5 பேர் அடங்கிய குழுவினர் அந்த நட்சத்திரக் ஹோட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கு கிளியை ஜோசியத்துக்கு பயன்படுத்திய அரியலூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்த கிளியை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் அவரை இச்செயலில் மீண்டும் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். கிளியும் வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.
சந்தோஷமாக தற்போது வண்டலூரில் சுற்றி வருகிறது அந்த பச்சைக் கிளி.. கந்தசாமிதான் பாவம் நொந்தசாமியாகி விட்டார்!