இதெல்லாம் செஞ்சா நான் மன்னிப்பு கேட்கிறேன்... சமரசப் பேச்சுக்கு ஃபுல் ஸ்டாப் போட்ட அழகிரி!
சென்னை: திமுகவில் மீண்டும் மு.க.அழகிரியைச் சேர்க்க அவரது குடும்பத்தினர் பலரும் கடுமையாக முயன்று வரும் நிலையில் திடீரென அழகிரி சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், இதனால் திமுக தலைவர் கருணாநிதி அப்செட் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு திமுகவில் வெடித்த பெரும் குழப்பம் மற்றும் கோஷ்டிப் பூசலில் அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் வசம் கட்சி வந்தது. அவரது தலைமையில் லோக்சபா தேர்தலையும் சந்தித்தது. ஆனால் தேர்தலில் படு தோல்வியை திமுக சந்தித்தது.
இந்தத் தோல்விக்குப் பின்னர் அழகிரியின் முக்கியத்துவம், அவர் மீண்டும் கட்சிக்கு வர வேண்டியதன் அவசியத்தை அவரது குடும்பத்தினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்த ஆரம்பித்தனர். ஸ்டாலினை மட்டும் நம்பியிருந்தால் திமுகவின் நிலை கவலைக்கிடமாகி விடும் என்றும் கருணாநிதிக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கனிமொழியையும் கட்சியில் ஒதுக்கி வைத்து வருவதையும் குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதியிடம் அழகிரி தரப்பில் பேசப்பட்டது. சில பல காரசார விவாதங்களுக்குப் பின்னர் கருணாநிதி,, அழகிரியை மீண்டும் சேர்க்க சம்மதித்து விட்டார்.
மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்து விட்டு சேரலாம் என்று கூறி விட்டார். அப்பாடா இது போதுமே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட அழகிரி தரப்பு அவரிடம் போய் இதைச் சொல்ல. சரி அதில் எனக்கு ஒன்றும் இல்லை என்று கூறிய அவர் அடுத்து சில நிபந்தனைகளைப் போட்டுள்ளார். இதைச் செய்தால் உடனே நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி விட்டாராம்.
மீண்டும் தன்னை தென் மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பில் அமர்த்த வேண்டும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்கள் அனைவரையும் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது அவற்றில் சில.
அதை விட முக்கியானது கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது. இந்த நிபந்தனைகள் குறித்து கருணாநிதியிடம் சமரசம் பேசியவர்கள் போனபோது அப்புறம் பார்க்கலாம் என்று கூறி விட்டாராம். இதனால் இப்போதைக்கு பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், மீண்டும் அழகிரி கட்சிக்குத் திரும்புவது உறுதி. சில பல தடைகள் இருந்தாலும் கூட அதையும் சீக்கிரமே சரி செய்து விடுவோம் என்று குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனராம்.
தற்போது கருணாநிதியுடன் நேரடியாக அழகிரியைப் பேச வைக்க தீவிர முயற்சிகள் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.