காதலியின் ஆபாச படங்களை வெளியிட்ட பி.இ. மாணவர்: அதிர்ச்சியில் விஷம் குடித்த பெண்
தர்மபுரி: தர்மபுரியில் காதலன் தனது ஆபாச படங்களை நண்பர்களின் செல்போன்களுக்கு அனுப்பியதால் இளம்பெண் விஷம் குடித்தார்.
தர்மபுரி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ராணி(20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் நாமக்கல் மாட்டம் குமாரபாளையத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தார். படிக்கையில் சக மாணவரான மதுரையைச் சேர்ந்த தீபக்(21) என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை தீபக் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் ராணி கர்ப்பமானார். உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தீபக்கை வலியுறுத்த அவரோ படிப்பு முடியட்டும் கருவை கலைத்துவிடு என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ராணியும் கருவை கலைத்துள்ளார்.
படிப்பு முடிந்ததும் ராணி தன்னை திருமணம் செய்யுமாறு கூற தீபக் மறுத்துவிட்டார். மேலும் தான் அழைக்கும்போது எல்லாம் உல்லாசமாக இருக்க வரவில்லை என்றால் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள வீடியோ மற்றும் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று தீபக் மிரட்டியுள்ளார்.
மிரட்டியதோடு மட்டும் அல்லாமல் ராணியின் ஆபாச படங்களை தனது நண்பர்களின் செல்போன்களுக்கு தீபக் அனுப்பியுள்ளார். இது குறித்து அறிந்த ராணி கடந்த 19ம் தேதி விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்ட குடும்பத்தார் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராணியின் தந்தை இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தீபக்கை கைது செய்தனர்.