மோடி கட்டிய வேட்டி.. 'ஐடியா' கொடுத்த தமிழிசை, வானதி!!
சென்னை: சென்னைக்கு நரேந்திர மோடி நேற்று வந்திருந்தபோது, அவர் கட்டிய வேட்டிக்குப் பின் ஒரு சின்ன சுவாரஸ்யக் கதை உள்ளது.
மோடி தனது சென்னை பயணத்தின்போது வேட்டி கட்டலாம் என்று தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள்தான் முடிவு செய்தார்களாம்.
அதிலும் பெண் தலைவர்களான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர்தான் முதல் முதலில் இந்த ஐடியாவைக் கொடுத்தார்களாம்.
மோடி இதற்கு முன்பு இரண்டு முறை தமிழகத்திற்கு வந்தபோதிலும், அவர் வேட்டி கட்டாமல் வழக்கமான தனது யூனிபார்மில்தான் வந்து போயிருந்தார். நேற்றுதான் அவர் முதல் முறையாக வேட்டிக்கு மாறியிருந்தார்.
பாரம்பரிய உடையில்
சென்னையில் நேற்று நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் தமிழக ஆண்களின் பாரம்பரிய உடையான வேட்டியில் காட்சி தந்தார்.
முதல் முறையாக
இதற்கு முன்பு இருமுறை அவர் தமிழகத்திற்கு வந்த போதும் அப்போது அவர் வேட்டி கட்டியிருக்கவில்லை. நேற்றுதான் முதல் முறையாக வேட்டி கட்டியிருந்தார்.
தமிழ்ப் புத்தாண்டுக்காக
இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவதால் அவர் வேட்டிக்கு மாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
செலக்ட் செய்த பெண் தலைவர்கள்
நேற்று மோடி கட்டிய வேட்டிக்குப் பின்னால் ஒரு கதை உள்ளதாம். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் தலைவர்கள்தான் இந்த வேட்டி ஐடியாவைக் கொடுத்தவர்களாம்.
தமிழிசை - வானதி
அதாவது தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசையும், வானதி சீனிவாசனும்தான் மோடி சென்னை கூட்டத்திற்கும், ரஜினி சந்திப்புக்கும் வேட்டி கட்டலாம் என்று ஐடியா கொடுத்தவர்களாம்.
ஆண்களுக்கு வேட்டி கட்டி அழகு பார்ப்பவர்கள் பெண்கள்தானே
ஆண்களுக்கு வேட்டி கட்டி அழகு பார்ப்பவர்கள் தமிழகப் பெண்கள். எனவே மோடியும் வேட்டியில் வந்தால், தமிழகப் பெண் வாக்காளர்களைக் கவர முடியும் என்ற எண்ணத்தில் இந்த ஐடியாவை தமிழிசையும், வானதியும் கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
ராம்ராஜ் வேட்டியா.. மோடி வேட்டியா
அடுத்து மோடி அணிந்திருந்தது ராம்ராஜ் வேட்டியா என்று யாராவது வேட்டி மன்றம்.. அதாவது பட்டி மன்றம் வைத்துப் பேசினாலும் பேசலாம்.