பிஎஸ்என்எல்லருந்து வந்திருக்கோம்னு சொல்லுவாக ... அப்பக் கூட நம்பிராதீக..!
சென்னை: பிஎஸ்என்எல் பெயரைப் பயன்படுத்தி சென்னை நகரில் பல போலிகள் உலா வருகிறார்களாம். எனவே யாராவது பிஎஸ்என்எல்லிலிருந்து வருவதாக கூறினால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முறையான அடையாள அட்டையைக் காட்டாமல் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகள் பிஎஸ்என்எல் பெயரைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத மோடம்களையும், சாதனங்களையும் விற்கும் சேல்ஸ் பிரதிநிதிகள் ஆவர். நேரடியாக விற்காமல், பிஎஸ்என்எல் பெயரைப் பயன்படுத்தி இவர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்களாம்.
மோசம் போன பலர்
இவர்களை நம்பி கருவிகளை வாங்கி பலர் மோசம் போயுள்ளனர். குறிப்பாக வயதானவர்கள்தான் பெருமளவில் ஏமாந்துள்ளனராம்.
வயதானவர்களைக் குறி வைத்து
ரீபன்ட் உண்டு, மூத்த குடிமக்களுக்கான சலுகை உண்டு என்று கூறி இவர்களிடம் பல குப்பை சாதனங்களைத் தலையில் கட்டி விட்டுள்ளனர் இந்த சேல்ஸ் பிரதிநிதிகள்.
எச்சரிக்கும் பிஎஸ்என்எல்
இதுகுறித்து பிஎஸ்என்எல் ஒரு எச்சரிக்கை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இதுபோன்ற டோர் டூ டோர் பிரசாரத்தை மேற்கொள்ள பிஎஸ்என்எல் யாருக்கும் அதிகாரம் தரவில்லை, யாரையும் அங்கீகரிக்கவில்லை. எனவே அடுத்த முறை பிஎஸ்என்எல் பெயரைச் சொல்லி உங்கள் வீட்டுக்கு யாரேனும் வந்தால் முறையாக பரிசோதித்து பின்னர் அவர்களை அணுகவும்.
ஐடி கார்டு காட்டச் சொல்லுங்க
வந்திருக்கும் நபரின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கேட்டு வாங்கி சரி பார்க்கவும். சந்தேகம் வந்தால் உடனடியாக அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவல அதிகாரிகளுக்குத் தகவல் தரவும். மேலும் போலீஸாருக்கும் தகவல் கொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனா போலி கார்டைக் காட்டிட்டா....!
ஆனால் போலி ஐடி கார்டு தயாரிப்பது இந்த காலத்தில் மிக மிக சாதாரணமான, எளிமையான விஷயம் என்பதால் அந்த கார்டு உண்மையானதா இல்லையா என்பதை எப்படி அறிவது என்பது மக்களுக்குப் புரியவில்லை.
நாமதான் ஜாக்கிரதையாக இருக்கனும்
மொத்தத்தில் வீட்டுக்கு யார் வந்தாலும் முறையாக விசாரித்து தேவைப்பட்டால் மட்டுமே அவர்கள் கூறும் பொருட்களை வாங்குவது குறித்து யோசிப்பது நல்லது.