“பிரியாணி” போட்டு ஓட்டு வேட்டையில் கட்சிகள் – மாஸ்டர்களுக்கு படு கிராக்கி
சென்னை: தமிழக தேர்தல் களத்தின் முக்கிய தருணமாக கருதப்படும் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தேதியான ஏப்ரல் 24 நெருங்கி வரும் நிலையில் கடைசி நேர அறிபறிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஒரு தேர்தலின் வெற்றியை பிரச்சாரமும், தொண்டர்களின் ஆதரவு மட்டும் தீர்மானிக்காது.தேர்தலில் வெற்றிக்கனியை சுவைக்க கட்சிகளுக்கு சிலபல ஆட்களின் உதவியும் தேவைப் படுகின்றது.
அதில் முக்கியமான ஒருவர்தான் "பிரியாணி மாஸ்டர்". காரணம் பிரச்சார வேலைகளில் ஈடுபடுவோருக்கு சம்பளத்துடன் கூடிய பிரியாணியும் அத்தியாவசியமாக கருதப்படுகின்றது.
பிரியாணி “மஸ்ட்”:
தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவு பெரிய "அப்பாடக்கர்" கட்சியாக இருந்தாலும் அவர்களின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது குதிரைக் கொம்பாக இருந்து வருகின்றது.அப்படி கிடைத்தாலும் அவர்களுக்கு சம்பளமும், பிரியாணிப் பொட்டலமும் அவசியம் கொடுத்தாக வேண்டும்.
ஆர்டரில் தீவிரம்:
தேர்தல் நாளிலும் "பூத் ஏஜன்ட்" ஆக செயல்படும் கட்சி நிர்வாகிகளுக்கு வினியோகம் செய்யவும் பிரியாணி தேவைப்படுகிறது. இதற்கான "ஆர்டர்" கொடுக்கும் பணியில்தான் அரசியல் கட்சிகள் இப்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
10 ஆயிரம் கிலோ பிரியாணி:
தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரம் கிலோ பிரியாணி விற்பனையாகிறது. இதில் சென்னையின் பங்களிப்பு 2000 கிலோ. மொத்த பிரியாணி விற்பனையில் மட்டன் 60 சதவீதம், சிக்கன் 40 சதவீதம் என்றளவில் உள்ளது.
பிரியாணிக்கு “கிராக்கி”:
தேர்தல் நாளன்று கூடுதலாக பிரியாணி தேவைப்படுவதால் ஏற்கனவே தயாராகும் பிரியாணியை விட கூடுதலாக நாற்பது சதவீதம் அளவுக்குத் தேவைப்படுகிறது. அதனால் பிரபல உணவகங்களில் பிரியாணிக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
ஹோட்டல்களில் ஆர்டர் குவிப்பு:
இதுபற்றி உணவக உரிமையாளார் ஒருவர், "கடந்த 17 ஆண்டுகளாக தேர்தலின் போது பல அரசியல் கட்சிகளுக்கும் தரமான பிரியாணி விற்பனை செய்து வருகிறோம். வழக்கத்தை விட கூடுதலாக அதிக அளவில் பிரியாணி தேவைப்படுவதால் ஆர்டர்கள் வந்து குவிகின்றன.
மாஸ்டருக்கு தட்டுப்பாடு:
ஆனால் பெரிய அளவில் பிரியாணி செய்வதற்கு நல்ல தரத்தோடு பிரியாணி செய்வற்குரிய மாஸ்டர்கள் குறைவாக இருப்பது தான் எங்களுக்கு சிக்கலாக இருக்கிறது. இருந்தாலும் கூடுதல் சம்பளம் கொடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பாக பிரியாணி தயார் செய்யும் மாஸ்டர்களை அழைத்து வந்துவிட்டோம்.
நாவில் நிற்கும் ருசி:
எங்களைப் போலவே பெரிய அளவில் பிரியாணி செய்து கொடுக்கும் ஆட்கள் சென்னையில் பலர் இருக்கின்றனர். தேர்தல் திருவிழாவின் முடிவு எப்படி இருந்தாலும் நாங்கள் தயார் செய்து கொடுக்கும் பிரியாணி ருசியை பலரும் ரசிக்கின்றனர் என நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது " இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதரத்துறை கண்டிப்பு:
இப்படி பெரிய அளவில் பிரியாணி செய்து கொடுக்கும் வியாபாரிகளை தேர்தல் நேரத்தில் கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையின் சார்பில் கூடுதலாக இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.அவர்கள் தரத்தோடு பிரியாணி தயாராகிறதா என்பதை பார்த்து வருகின்றனர்.
காசு மட்டும் போதாது:
இது குறித்து அரசியல் கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது "பிரியாணி கொடுக்கவில்லை என்றால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆட்கள் பணியாற்ற வர மறுக்கின்றனர். அதனால் தேர்தல் என்றால் பிரியாணி என்பதும் அவசியமாகி விட்டது.
வெளிப்படையாய் முடியாது:
ஆனால் இதை நாங்கள் வெளிப்படையாக அவர்களுக்கு கொடுக்க முடிவதில்லை. மறைத்து தான் கொடுக்கிறோம். ஏனென்றால் அந்த செலவுகளையும் வேட்பாளர் கணக்கில் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை அதிகாரிகள் சேர்த்துவிடக் கூடிய அபாயம் இருக்கிறது" என்றார்.
சொந்தமாக பிரியாணி “ரெடி”:
பிரபலமான கடைகளில் ஆர்டர் கொடுத்து பல அரசியல்வாதிகள் பிரியாணி வாங்கும் அதே நேரத்தில் வேறு பலரோ மாஸ்டர்களை அழைத்து வந்து தங்களுக்கு சொந்தமான இடங்களில் பிரியாணி தயாரித்து தேர்தல் நாளன்று பூத் ஏஜண்ட் பணி உட்பட பல விதமான பணிகளில் ஈடுபடுவோருக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர்.
பிரியாணி மாஸ்டர்கள் கவனிக்க:
அதனால் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பிரியாணி மாஸ்டர்களுக்கு கடும் கிராக்கிதான்.