மிகப்பெரிய வெற்றிக்கான தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது… என்கிறார் அன்புமணி
தர்மபுரி: தர்மபுரி தொகுதியில் பாமகவிற்கு மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என்று தர்மபுரி லோக்சபா தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்திற்கு சென்று வாக்களித்த பின்னர் தான் போட்டியிடும் தொகுதியான தர்மபுரியில் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்குச் சென்று அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.
தர்மபுரியில் காலைமுதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அதைக் கண்டு உற்சாகமடைந்த அன்புமணி ராமதாஸ் அதே உற்சாகத்துடன் செய்தியாளரிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
எதிர்ப்பு அலை
மத்தியிலே மாற்றம் வேண்டும் திமுக அதிமுக எதிர்ப்பு அலை வீசுகிறது.மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
தர்மபுரி வாக்குப்பதிவு
தர்மபுரியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உற்சாக வரவேற்பு
தர்மபுரி மிகவும் பின்தங்கிய பகுதி, வேலை வாய்ப்பு உருவாக்குவோம். அதை கூறித்தான் வாக்கு கேட்டுள்ளோம். போகும் இடமெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
திருமங்கலம் ஃபார்முலா
கிராமப்புரங்களில் பணப்பட்டுவாடா... தாறுமாறாக நடைபெற்றது. திருமங்கலம் பார்முலாவை இங்கே கையாண்டுள்ளனர். ஓட்டுக்கு நோட்டு கொடுப்பது கேவலம் என்பது இவர்களுக்கு தெரியாதா?
தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது
மக்களிடையே எழுச்சி உருவாகியுள்ளது. அதிக சதவிகித வாக்குப்பதிவுக்கு காரணம் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
நேர்மையான வாக்கு
2500 பேருந்துகள் ஜெயலலிதாவிற்கு வந்தனர். அவர்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். ஆனால் இப்போது மக்கள் வாக்களிப்பது நேர்மைக்காக என்றார்.