தஞ்சை பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: 30 பேர் காயம், கார்கள் உடைப்பு, படகுகளுக்கு தீ வைப்பு
பேராவூரணி: தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மீது கல் வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. இதில் பல கார்கள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கார் குளத்துக்குள் தூக்கி வீசப்பட்டது. சில படகுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் வேட்பாளர் முருகானந்தம் உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
கருப்பு முருகானந்தம் நேற்று சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் வாக்கு கேட்டு சென்றார். பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் பள்ளிவாசல் வழியாக ஊருக்குள் போக அவரது வாகனங்கள் திரும்பின.
அப்போது பள்ளிவாசல் முன்பாக கூடியிருந்தவர்கள் கருப்பு முருகானந்தமும் பாஜகவினரும் ஊருக்குள் வரக்கூடாது என தடுத்தனர். இதனை அந்த ஊர் ஜமாத் தலைவர்கள் கண்டித்தனர். ஓட்டு கேட்க வருகிறவர்கள் யாரையும் தடுக்கக்கூடாது என்றும் அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுமாறும் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதை அவர்கள் ஏற்கவில்லை.
இந் நிலையில் திடீரென சிலர் கூட்டத்தினர் மீது கற்களையும், பாட்டில்களையும், கட்டைகளையும் வீசினர். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கார் பக்கத்தில் இருந்த குளத்திற்குள் தூக்கி வீசப்பட்டது. பல மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதில் வேடாபளர் முருகானந்தம், பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட 30 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தஞ்சாவூர் எஸ்பி தர்மராஜன், டிஎஸ்பி செல்லபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பள்ளிவாசலுக்கு உள்ளே இருந்தவர்களை வெளியேறுமாறு போலீசார் கோரினர். ஆனால், அவர்கள் வெளியே வர மறுத்துவிட்டனர்.
இதையடுத்து ஜமாத் பிரமுகர் தாஜூதீன் உள்ளே சென்று பள்ளிவாசலில் இருந்தவர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஒவ்வொருவராக வெளியே வர தொடங்கினர். அவர்களை போலீசார் பிடித்து வேன்களில் ஏற்றினர்.
இதற்கிடையில் மல்லிப்பட்டினம் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகளுக்கு யாரோ தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர். தகவல் அறிந்து பேராவூரணி தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர்.
சம்பவத்தையடுத்து பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் அங்கு பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சேதுபாவாசத்திரம் வந்தார். அவருக்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.