உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்குகளை வரவு வைத்த பாஜக வேட்பாளர்கள்
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பகீரத முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளனர். இந்த இடைத்தேர்தல் வெற்றியை வரலாறு காணாத வெற்றி! இமாலய வெற்றி என கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக வார்டு வார்டாக அமைச்சர்கள் வாக்கு சேகரித்தது ஒருபுறம் இருக்க முதல்வரே பிரச்சாரத்திற்கு வந்து வாக்கு சேகரித்தார். வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டதால் அதிமுகவினருக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
எதிரிகளே இல்லாத களம்
உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக, பாமக, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் போட்டியிடவில்லை. அதிமுகவை எதிர்த்து முதன் முறையாக பாஜக களம் கண்டது.
மூன்று மேயர் தேர்தல்
நெல்லை, தூத்துக்குடி, கோவை மேயர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக பாஜக வேட்பாளர்கள் களம் இறங்கினர். மிரட்டல்கள், பேரங்கள், திரைமறைவு வேலைகள் நடைபெற்றதில் நெல்லையில் பாஜக மேயர் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதே கையோடு அதிமுகவிலும் இணைந்தார்.
கோவை, தூத்துக்குடி
மீதமுள்ள இரண்டு மேயர் வேட்பாளர் பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் கோவையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பாஜக வேட்பாளர் பெற்றுள்ளார். ஆளும் கட்சி வேட்பாளருக்கும், பாஜக வேட்பாளருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளது என்றாலும் இதற்கு களமிறக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 20. அதையும் மீறி பாஜக வேட்பாளர் நந்தகுமார் 1 லட்சத்திற்கும் வாக்குகளை பெற்றுள்ளார்.
அடி தடி கலாட்டா
இந்த வாக்குகளைப் பெற அவர் வாங்கிய அடி கொஞ்ச நஞ்சமல்ல. அதேபோல தூத்துக்குடி பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமியும் அடி வாங்கினார். இடைத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 31708. அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி 84885 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நகராட்சி மன்றங்களில்
அதேசமயம் நகராட்சி மன்ற பதவிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் 6ஆயிரம், 3 ஆயிரம் என சொற்ப வாக்குகளே பெற்றனர்.
ஆறுதல் வெற்றி
முத்துப்பேட்டை பேரூராட்சி 18-வது வார்டில் பாஜக வேட்பாளர் செந்தில் காந்தி 232 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். அதிமுக இங்கு பின்னுக்குத் தள்ளப்பட்டது.
2016 சட்டப்பேரவை தேர்தலில்
2016 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் சோதனை அடிப்படையில் பாஜக போட்டியிட்டது. இந்த வேட்பாளர்களுக்கு மதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். பதிவான வாக்குகள் குறைவுதான் எனினும் பல்வேறு போட்டிகளுக்கு இடையேயும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடிய பாஜகவினர் வாக்குகளை வரவு வைத்துள்ளனர் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.