யாருடன் கூட்டணி? பரமக்குடியில் பாஜக ஆலோசனை!
பரமக்குடியில் தமிழக பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான வியூகம் மற்றும் கூட்டணி குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக, இடதுசாரிகளுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஆனால் திமுகவோ காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இதனால் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதா? அல்லது தேமுதிக, பாமக, மதிமுகவை உள்ளடக்கி தனி அணியை உருவாக்குவதா? என்பது குறித்து பாஜக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் செயல்பாடுகளில் கடுமையான அதிருப்தி தமிழகத்தில் இருக்கிறது. இதனால் காங்கிரஸுடன் திமுக அணி சேராது என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு. திமுக போன்ற பெரிய கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதை முதல் கட்டமாகவும் அது நிறைவேறாத நிலையிலேயே பிற கட்சிகளை அணி சேர்த்து கூட்டணி அமைப்பது எனவும் பாஜகவும் திட்டமிட்டு வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் பரமக்குடி செயற்குழுக் கூட்டத்தில் இவைபற்றி விவாதிக்கப்பட்டு அதனடிப்படையில் கூட்டணிக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.