'டாஸ்மாக்'கில் மட்டுமே 'பாஸ் மார்க்' வாங்கிய அரசு: போட்டுத்தாக்கும் தமிழிசை
தூத்துக்குடி: தமிழக அரசு டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே பாஸ்மார்க் வாங்கியுள்ளது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் மேயர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தூத்துக்குடி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் 1967க்கு பிறகு தேசிய எழுச்சி என்பது பாஜகவினால் ஏற்பட இருக்கிறது. முதல்வர் தூத்துக்குடிக்கு வந்த போது தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
தேசிய கட்சிகள் உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடக் கூடாதா, பரீட்சை எழுதினால்தான் பாஸ் ஆக முடியும். தேர்தலில் போட்டியிட்டால்தான் வெற்றி, தோல்வி பற்றி தெரிய வரும்.
முதல்வர் தேர்தலிலும் போட்டி
முதல்வர் தேர்தலில் யாரும் போட்டியிட கூடாது என்கிறார். இது என்ன நியாயம். தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக உரிமை. நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் மட்டுமல்ல முதல்வர் தேர்தலிலும் போட்டியிடுவோம்.
ஜெயலட்சுமிக்கு நன்றி
எவ்வளவோ மிரட்டல் வந்த நிலையிலும் தன் நிலையில் இருந்து மாறாத வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு என் நன்றிகள்.
டாஸ்மாக்கில் பாஸ் மார்க்
இங்கு அதிமுகவுக்கு அமைச்சர்கள் வந்து தான் வாக்குகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. எங்கள் கட்சி மத்திய அமைச்சர்கள் அவர்கள் தொகுதியில் மக்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் அதிமுக அரசு டாஸ்மாக்கை மட்டுமே கவனித்து பாஸ் மார்க் வாங்கியுள்ளது.
வேட்பாளர் கடத்தல்
தேர்தல் ஆணையத்தின் ஆதரவு ஆளும்கட்சிக்கு உள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர் பிரபாகரன் என்பவர் அதிமுகவினரால் கடத்தப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தால் அதிகாரிகல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்து கொண்டு வேட்பாளர் வீட்டில் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
என்ன சாதனை?
அதிமுகவுக்கு மறுபடியும், மறுபடியும் வாக்களித்து என்ன சாதனை செய்ய போகிறேர்கள். இவ்வாறு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.