பா.ஜ.கவிற்கு அதிமுக தயவு தேவையில்லை: ராஜ்நாத் சிங்
திருச்சி: பாரதீய ஜனதா கட்சி மத்தியில் தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக தயவு தேவைப் படாது என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்காக பாஜக இன்று மதியம் திருச்சி வந்தார். ச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் எந்த விதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை. குறிப்பாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சியின்மை, வேலை வாய்ப்பின்மை அதிக அளவில் உள்ளது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்ததும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தப்படும்.
வானவில் கூட்டணி
தமிழகத்தில் உருவாகியுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வானவில் போன்று அழகான கூட்டணியாக அமைந்துள்ளது. எங்கள் கூட்டணி கட்சிக்குள் அனைவரும் அனைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்களும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகிறார்கள்.
கருத்து வேறுபாடு இல்லை
கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு என்பது தவறு. எங்கள் பிரசாரத்தில் விஜயகாந்த், பிரேமலதா பிரசாரம் நல்ல சிறப்பாக கூட்டணிக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
அதிமுக தயவு தேவையில்லை
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 20 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெறும். தேர்தலுக்கு பிறகு பாஜக உடன் அ.தி.மு.க. சேர வாய்ப்பு இல்லை. ஏனென்றால் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் அதிகமாக இடங்களை பெற்று அறுதி பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எனவே அ.தி.மு.க. ஆதரவு தேவைப்படாது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா குஜராத் மாநிலத்தை விட தமிழ்நாடு அனைத்து வகையிலும வளர்ச்சி அடைந்துள்ளது என்று நரேந்திரமோடிக்கு பதிலளித்து புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். நான் அந்த புள்ளி விவரங்களை அறியவில்லை.
ஆனால் குஜராத் மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை மத்திய அரசின் பாராளுமன்ற குழுவே பாராட்டி உள்ளது.
வெளிநாட்டினரும் பாராட்டு
மேலும் குஜராத்தை பார்வையிட்ட வெளிநாட்டினரும் பாராட்டி உள்ளார்கள். அதேபோன்று நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியா பிளவுபட்டு விடும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர் மூன்றாவது முறையாக முதல்வராக பெறுப்பு வகித்து வரும் குஜராத் மாநிலம் சிறப்பாக உள்ளது.
மீனவர் பாதுகாப்பு
பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியில் ரீதியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்போம். அதேபோன்று தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் உள்ள மீனவர் பிரச்சினைக்கும் ஒரு ஆணையம் அமைத்து மீனவர் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.
காவிரி பிரச்சினை
காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும், பாஜக ஜனதா ஆட்சி அமைந்தாலும் தீர்வு ஏற்படாது என்பது சரியல்ல.
சேது சமுத்திர திட்டம்
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் காவிரி பிரச்சினையில் சுமூக தீர்வு காண்போம். சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை ராமர் பாலத்தை இடிக்காமல் பாஜக ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றுவோம் என்றார் ராஜ்நாத்சிங்.