இலங்கையில் புத்தமத குருக்கள் சமூக விரோதிகளை ஏவி முஸ்லீம்களை கொல்கின்றனர்: தா.பா.
சென்னை: இலங்கையில் புத்தமத குருக்கள் சமூக விரோதிகளை ஏவி இஸ்லாமிய மக்களை கொன்றழிக்கத் தொடங்கியுள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்த அலுத்தகமா என்னும் இடத்தில் தமிழை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம் மக்களின் மீது மிகவும் கடுமயான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை முன்னின்று நடத்தியவர்கள் சிங்கள இனவெறி அரசியலை அடிப்படையாக கொண்ட ஆளும் கட்சியை சார்ந்தவாகள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்க முடியாது. இதில் ராஜபக்சே அரசுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் கொல்லப்பட்டுளளார்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
இலங்கையில் புத்தமத குருக்கள் சமூக விரோதிகளை ஏவி இஸ்லாமிய மக்களை கொன்றழிக்கத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் சிறுபான்மையினரோடு சின்ன சிறுபிரச்சனைகளை உருவாக்கி, அதில் சிங்கள காடையர்களை கொண்டு, தாக்குத்தல் தொடுக்கும் வழக்கத்தை இலங்கை கொண்டுள்ளது. 1956, 1983 ஆண்டுகளில் இலங்கையில் வெகுமக்களின் மீது நடந்த தாக்குதலை இதற்கு உதாரணமகக் கூற முடியும்.
இலங்கை அரசு எந்தப் பிரச்சனையையும் அறிவுப்பூர்வமாக அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு பதிலாக இன அழிப்பின் மூலம் தீர்த்துக்கட்ட முயற்சிப்பது தெளிவாகி வருகிறது.
முள்ளிவாய்கால் படுகொலை பற்றி ஐக்கிய நாடுகள் விசாரணை தொடங்குவதாக அறிவித்துள்ள இன்றைய சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த வன்செயலை இந்தியக் கமயூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கைவாழ் மக்களின் மனித உரிமைகளை சாதி, மத வேறுபாடு இல்லாமல் குடிமக்களாக கருதி, குடியாட்சி நடத்த வைக்க, மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ப்பில் வற்புறுத்துகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.