டீத்தூளில் ஹேர் டை கலப்படம்- அதிகாரிகள் அதிர்ச்சி
நெல்லை புதிய, பழைய பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிலகடைகளில் காலவதியான குளிர்பானங்கள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் திறந்த வெளியில் உணவு பொருட்களை விற்பனை செய்வதாக புகார் வந்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட உணவு அலுவலர் டாக்டர் கருணாகரன் மற்றும் தச்சநல்லூர் பகுதி உணவு அலுவலர் சங்கரலிங்கம், நெல்லை பகுதி காளிமுத்து, பாளை கலியானண்டி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், தச்சநல்லூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் பல கடைகளில் கலாவதியான குளிர்பானங்கள், தயாரிப்பு தேதி குறிப்பிடாத ஜூஸ், மோர் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு குடோனில் நடத்திய சோதனையில் கெட்டு போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளிர்பானங்கள், மோர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ஒரு சில கடைகளில் கலப்பட தேயிலை பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த கலப்பட தேயிலை பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை சோதனை செய்து பார்த்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் அதில் தலைக்கு அடிக்கும் ஹேர் டை கலந்திருப்பது தெரிய வந்ததுதான்.
இதனால் டீயின் நிறம் நல்ல அடர்த்தியாக இருக்கும். ஆனால் ஹேர் டை கலந்த டீயை குடிப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போய்விடும். அவ்வளவு கொடிய விஷம் கொண்டது ஹேர் டை. உனடியாக அந்த டீ பாக்கெட்டுகளையும் அழித்தனர். இந்த அதிரடியை தொடர்ந்து மேலும் பல இடங்களில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.