உள்ளாட்சி இடைத்தேர்தலை உடனே நிறுத்த வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
கோவை: ஆளுங்கட்சியினர் பெருமளவில் பணப் பட்டுவாடா செய்கின்றனர். இதனால் உள்ளாட்சி இடைத் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை மேயர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கோவை வந்தார் பொன். ராதாகிருஷ்ணன்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்வதால் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், இது தொடர்பாக அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் முறைகேடுகள்...
"உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்கிறார்கள். முறைகேடுகள் அதிகம் நடப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
பாஜகவுக்கு ஆதரவு...
ஜனநாயகத்திற்கு வாக்களிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு, பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும்.
பணப்பட்டுவாடா...
காலையில் கோவையின் நகர்ப்புறப் பகுதிகளில் ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்திருப்பதை பாஜகவினர் தடுத்துள்ளனர். மக்களும் தடுத்துள்ளனர்.
வீடியோ ஆதாரம்...
பணப்பட்டுவாடா செய்திருப்பதை வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்றார் அவர்.
நெல்லை பாஜக வேட்பாளர்...
ஏற்கனவே தூத்துக்குடி மேயர் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் போட்டியிலிருந்து விலகியதோடு அதிமுகவிலும் இணைந்து விட்டார். இவர் வாபஸ் பெறுவதற்கு முதல் நாள்தான் பொன். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து குடும்பத்தோடு ஆசி பெற்றுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.