டிவியில் குத்தாட்டம் பார்க்கும் சிவன்: நவீன சரஸ்வதி சபதம் படத்திற்கு தடை கோரி மனு
சென்னை: இந்துக்கடவுள்களான விநாயகர், சிவபெருமான் ஆகியோரை அவமதிப்பு செய்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ள நவீன சரஸ்வதி சபதம் படத்திற்கு தடை விதிக்கக்கோரி பாரத மக்கள் கட்சியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாரத் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணாதுரை கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது.
ஜெய் நடித்துள்ள படம் நவீன சரஸ்வதி சபதம். இப்படத்தில் இந்துக்கடவுளான விநாயகர் டிஸ்கோ நடனம் ஆடுவது போலவும், சிவபெருமான் ஆபாசமான குத்தாட்டங்களை கம்ப்யூட்டரில் பார்ப்பது போலவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது பாலியல் வைத்தியரின் டிவி நிகழ்ச்சியை சிவபெருமான் பார்ப்பது போலவும் காட்சிகள் வைத்துள்ளனர்.
இவை இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதால் இப்படத்தை தடை செய்யவேண்டும், இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.