ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரி ஜெயலலிதா, கருணாநிதியுடன் சந்திரபாபு சந்திப்பு
சென்னை: ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அண்மையில் தமிழகம் வந்து ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரிடம் ஆதரவு கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் நேரில் சந்தித்து ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரி வருகிறார்.
ஜெ., கருணாநிதியுடன் சந்திப்பு
இன்று சென்னை வந்த சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு, ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரி செல்வாக்கு மிகுந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன்.
காங்கிரஸ் கட்சி சுய லாபத்துக்காக ஆந்திராவை துண்டாடுகிறது. அதுவும் ஆந்திர சட்டசபை ஒப்புதல் இல்லாமலேயே ஆந்திராவை துண்டாட நினைக்கிறது காங்கிரஸ் கட்சி. தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் சதி செய்கிறது என்றார்.
பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திரபாபு நாயுடு சந்தித்து ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரினார்.