ஓட்டுப்போட சொந்த ஊர்களுக்கு செல்ல 500 சிறப்பு பஸ்கள்
சென்னை: சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வியாழக்கிழமை லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. அனைவரும் வாக்களிப்பதற்கான வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் தங்கி பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்து அரசு போக்குவரத்து கழகங்களை கேட்டு கொண்டது.
இதனடிப்படையில் 500 சிறப்பு பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று மாலை முதல் இயக்கப்படுகிறது. விழுப்புரம் போக்கு வரத்து கழகத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்களும், மற்ற போக்குவரத்து கழகத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்களும் விடப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து எந்தெந்த பகுதிக்கு பஸ் வசதி தேவை என்பதை அறிந்து அந்த இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும் போது, ஓட்டுப் போடுவதற்கு சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கோயம்பேட்டில் இருந்து இன்று மாலை முதல் அதிகாலை வரை தேவையான இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் 500 இயக்கப்படும். எந்தெந்த பகுதிக்கு தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப பஸ்கள் விடப்படும். கூடுதலாக பஸ்வசதி தேவைப்பட்டாலும் அதற்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.