3 மாதத்தில் 6வது முறையாக இடிந்து விழுந்த சென்னை ஏர்போர்ட் மேற்கூரை: பயணிகள் பீதி
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் ரூ.2015 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டன. இதை துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் துவங்கி வைத்தார்.
இந்த புதிய கட்டிடத்தில் உள்நாட்டு முனையம் முனையம் மட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் செயல்படத் துவங்கியது. கட்டிடத்தின் மேல் தளத்தில் புறப்பாடும், கீழ் தளத்தில் வருகை பகுதியும் உள்ளது. இந்நிலையில் புறப்பாடு பகுதியில் மதுரை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு செல்லவிருந்த பயணிகள் நேற்று மாலை போர்டிங் பாஸ் வாங்க காத்திருந்தனர்.
அப்போது மேல் கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. இடிந்து விழுந்த மேல் கூரை பகுதி மட்டும் துண்டிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் 20 நிமிடங்கள் போர்டிங் பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 முறை இடிந்து விழுந்தது. இந்நிலையில் நேற்று 6வது முறையாக இடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.