பிளஸ்டூவில் கலக்கிய சென்னை மாநகராட்சி பள்ளிகள்.. சதம், சாதனையில் அபாரம்!
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் பலவும் இந்த முறை அசத்தியுள்ளன பிளஸ்டூ தேர்வில்.
மாநில அளவிலான முதலிடத்தை வெறும் 20 மதிப்பெண்களில்தான் சென்னை மாநகராட்சி மாணவ, மாணவியர் தவற விட்டுள்ளனர்.
தொடவே முடியாத உயரம் என்று சிலரால் கருதப்பட்டாலும் கூட எட்டிப் பிடிக்கக் கூடிய உயரத்திற்கு இந்த மாணவ, மாணவியர் வந்துள்ளது மிகப் பெரிய சந்தோஷமான விஷயமாகும். இவர்களுக்கு பிற தனியார் பள்ளிகளில் தரப்படுவது போன்ற வசதிகளும், வாய்ப்புகளும் கிடைத்தால் மாநில அளவில் ரேங்கிங்கில் இவர்களும் பட்டையைக் கிளப்புவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
முதல் இடம் 1173
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைப் பொறுத்தவரை முதல் இடம் 1173 மதிப்பெண்களுக்குக் கிடைத்துள்ளது. 2வது இடம் 1168 ஆகும். 3வது இடம் 1160 ஆகும். மாநில அளவில் கிருஷ்ணகிரி மாணவி சுசாந்தி பெற்ற முதல் மதிப்பெண் 1193 ஆகும்.
1100 மார்க்குக்கு மேல் 47 பேர்
அதேபோல 1100 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 47 ஆகும்.
331 பேர் ஆயிரத்திற்கும் மேல்
331 மாநகராட்சி மாணவச் செல்வங்கள் ஆயிரத்திற்கும் மேலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
சதம் போட்டச் செல்லங்கள் 26
மேலும் 26 மாணவ மாணவியர் 200க்கு 200 மதிப்பெண்களை சில பாடங்களில் எடுத்துள்ளனர்.
தேர்ச்சி விகிதமும் சூப்பர்...
மேலும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மொத்தமாக மாணவர் தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாகும். மேலும் சில பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியையும் காட்டி அசத்தியுள்ளனர்.
மேயர் பாராட்டு
சென்னை மாநகராட்சிஅளவில் இரண்டாம் இடம் பெற்ற ஏழை மாணவி சௌஜன்யா, 1168 பெற்று சாதனை படைத்துள்ளார். ஏழை மாணவியான இவருக்கு மேயர் சைதை துரைசாமி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.