ரம்ஜான் விடுமுறையால் குறைந்த மின்சார ரயில்கள்- கூட்டம் குறையாததால் அவதிப்பட்ட மக்கள்!
சென்னை: சென்னையில் ரம்ஜான் விடுமுறையை ஒட்டி மின்சார ரயில்களின் பயன்பாடு குறைந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
பயணிகள் எப்போதும் நிறைந்து செல்லும் இந்த மின்சார ரயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் மட்டும் சேவை பாதியாக குறைக்கப்படும்.
பொது மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் விடுமுறை நாட்களில் மின்சார ரயில் வேலை குறைக்கப்படுவது வழக்கம்.
குறைந்த சேவை:
அந்த வகையில் ரம்ஜான் பண்டிகையான இன்று மின்சார ரயில் சேவை ஞாயிறு விடுமுறை தினத்தில் உள்ளது போல இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.
வழக்கம்போல் வேலை:
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ரம்ஜான் பண்டிகை நாளில் முஸ்லிம் சமுதாயத்தினர் நடத்தும் கடைகள், தொழில் நிறுவனங்கள் மட்டுமே மூடப்பட்டு இருந்தது.
நிரம்பி வழிந்த கூட்டம்:
இது தவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. மற்றபடி அனைத்து தனியார் நிறுவனங்களும், கடைகளும், அலுவலகங்களும் செயல்பட்டதால் மின்சார ரயில்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
30 நிமிடத்திற்கு ஒன்று:
கடற்கரை முதல் தாம்பரம் இடையே 30 நிமிடத்திற்கு ஒரு சேவை ரயில் இயக்கப்பட்டதால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. அனைத்து ரயில்களும் நிரம்பி சென்றன.
விடுமுறை போல் இல்லை:
தொடர் விடுமுறை நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும். ஆனால் இன்று வழக்கம் போல மக்கள் நடமாட்டம் இருந்தது. பஸ், ரயில்களில் வழக்கமாக கூட்டம் நிரம்பி வழிந்தது.
ரயில்களைக் குறைக்க கூடாது:
இதனால், பண்டிகை நாட்களிலும் ரயில்களைக் குறைக்காமல் இயக்கினால்தான் இந்த மக்கள் கூட்டம் குறையும் என்பதை தெற்கு ரயில்வே இனிமேல் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.