சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள்: மேயர் சைதை துரைசாமி
சென்னை: சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.
இது தொடர்பாக சென்னை மாமன்ற கூட்டத்தில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், ஒரு வார்டுக்கு ஒன்று வீதம் 200 உணவகங்களும், அது தவிர ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, மற்றும் எழும்பூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகங்கள் இருக்கின்றன.
தற்போது ஒவ்வொரு வார்டிலும் மேலும் ஒரு அம்மா உணவகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதே போன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனை மற்றும் கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் அம்மா உணவகம் அமைப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே 203 அம்மா உணவகங்கள் உள்ளன. தற்போது மேலும் 200 அம்மா உணவகங்கள் தொடங்கப் படஉள்ளது.
அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 2,400 பேரும், சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2,436 பேரும் பணிபுரிந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.