சென்னை புறநகரில் நடமாடுவது சிறுத்தையா... சிங்கமா? கர்ஜனை சத்தம் கேட்டதால் மக்கள் பீதி!
சென்னை: சென்னைப் புறநகரில் மக்களை அச்சுறுத்தி வருவது சிறுத்தையா சிங்கமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் அருகே ஆதனூரில் உள்ள ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூப்பட்டது. அதனை பிடிக்க வனத்துறையினர் ஏரியில் கூண்டு வைத்துள்ளனர்.
கண்காணிப்பு காமிராக்கள்
செங்கல்பட்டு, அஞ்சூர், வண்டலூர், நெடுங்குன்றம் அடுத்த சதானந்தபுரம், ஆலப்பாக்கம் காரணைப்புதுச்சேரி, அருங்கால், திருப்போரூர் உள்ளிட்ட வனக்காடுகளில் ஏற்கனவே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்த வனத்துறையினர் அங்கும் கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை வைத்துள்ளனர்.
ஒன்றா, பலவா?
காட்டில் உள்ளது ஒரே சிறுத்தைதானா அல்லது பல சிறுத்தைகள் இருக்கிறதா என்பது தெரியாமல் வனத்துறையினர் குழம்பிப்போய் உள்ளனர்.
அருங்கால் பகுதிக்கும் பெருமாட்டுநல்லூர் பகுதிக்கும் இடையில் உள்ள காட்டிலிருந்து சிறுத்தை துரத்தியதால் அங்கிருந்து தப்பி வந்த புள்ளி மான் ஒன்றை நந்திவரம் காலனி பகுதி மக்கள மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
ஒருவேளை, சிங்கமா இருக்குமோ..
இந்நிலையில் சென்னைப் புறநகரில் மக்களை அச்சுறுத்தி வருவது சிறுத்தையா? சிங்கமா? என சர்ச்சை கிளம்பியுள்ளது. நேற்று இரவெல்லாம், சிங்கத்தின் உறுமல் சப்தத்தை கேட்டதாக ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மக்கள் கருத்தால் குழம்பியுள்ள வனத்துறையினர் மானை அடித்துச் சென்றது எந்தவகை விலங்கு என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சர்கஸ் சிங்கம்
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், சர்கஸ்களில் இருந்து மீட்கப்பட்ட 13 சிங்கங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அதில் ஏதாவது ஒரு சிங்கம் தப்பித்து ஊருக்குள் புகுந்துவிட்டதோ என்ற சந்தேகம் ஊரப்பாக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இரவில் வெளியே வர வேண்டாம்
இதையடுத்து வண்டலூரிலுள்ள சிங்கங்களை கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரையுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பீதி தொற்றிக்கொண்டுள்ளது. இரவு நேரங்களில் மக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.