இறந்தும் துடிக்கும் இதயம் – மூளைச்சாவு அடைந்த மெஷின் ஆபரேட்டர் உறுப்புகள் தானம்!
சென்னை: சென்னையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மெஷின் ஆபரேட்டர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணிச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். ஆட்டோ டிரைவர்.
இவருடைய கடைசி மகன் பாலாஜி. இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு லேத் பட்டறையில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
தவறி விழுந்த பாலாஜி:
கடந்த 21 ஆம் தேதியன்று பட்டறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது பாலாஜி தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது.
அப்போலோவில் சிகிச்சை:
அவர் சிகிச்சைக்காக கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று பகல் 1.30 மணியளவில் பாலாஜி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உறுப்புகள் தானம்:
இதனையடுத்து பாலாஜியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய பெற்றோர்கள் முன்வந்தனர். இதையடுத்து இதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை மருத்துவர்கள் வெளியே எடுத்தார்கள்.
இறந்தும் துடிக்கும் இதயம்:
பாலாஜியின் உடல் உறுப்புகளில் இதயம் நேற்று மாலை 6.29 மணியளவில் சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தம்:
இதற்காக அப்போலோ மருத்துவமனையிலிருந்து முகப்பேர் வரை போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சரியாக 6.40 மணிக்கு முகப்பேர் தனியார் மருத்துவமனைக்கு இதயம் கொண்டு சேர்க்கப்பட்டது.
இறந்து உயிர்வாழும் மகன்:
மற்ற உறுப்புகளும் உறுப்பு தேவையுடன் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்படுவதற்காக மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பபட்டன. இறந்து தங்கள் மகன் உயிர்வாழ்கின்றான் என்று பாலாஜியின் பெற்றோர் மனதை உருக்கும் வகையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.