மெட்ரோ ரயிலிலும் அறிமுகமாகிறது சலுகை விலையில் பயண அட்டை
சென்னை : மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய சலுகை பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இரண்டு நிறுத்தங்களுக்கு இடையே தினமும் பயணம் செய்வோருக்கு சலுகை பயணச்சீட்டு வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், கட்டணத்திலிருந்து 20 சதவீதம் கழிவு பெற முடியும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
12 முறை, 50 முறை, 100 முறை என மூன்று சலுகை கட்டண அட்டைகள் வழங்கப்பட உள்ளது.இதில், 12 முறை பயண அட்டை 7 நாட்களுக்கும், 50 முறை பயண தடவை 30 நாட்களுக்கும், 100 முறை பயண அட்டை 60 நாட்களுக்கும் செல்லுபடியாகும். இந்த பயண சலுகை அட்டையை பெற திரும்பப்பெறத்தக்க முன் பணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஒரு பயண முறை என்பது பயணம் தொடங்கும் இடத்திலிருந்து, இறங்கும் நிலையம் வரை செய்யும் ஒருவழி பயணம் ஆகும்.
செல்லுபடி காலத்திற்குள் பயன்படுத்தாத பயண முறைகளை அடுத்த பதிவேற்றத்தின் போது சேர்த்துக்கொள்ளப்படும்.
பயண அட்டையை திருப்பிக்கொடுத்தால், எஞ்சியுள்ள பயண முறைகளுக்கான கட்டணத்தையும், முன் பணத்தையும் பயணிகளிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் திருப்பி செலுத்திவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.