'சாரதா சிட் பண்ட் பாணி' யில் தமிழகத்திலும் ரூ.10,000 கோடி மோசடி! திடுக் புகார்!
சென்னை: தமிழகத்தில் 5 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ. 10,000 கோடி வசூலித்து ஏமாற்றியதாக ராஜஸ்தானைச் சேர்ந்த பி.ஏ.சி.எல். நிறுவனத்தின் மீது முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்தது பி.ஏ.சி.எல். நிறுவனம். டெல்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன.
தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களில் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான முகவர்கள் நியமிக்கப்பட்டனர். ரூ.250 முதல் பல லட்சம் ரூபாய் வரை பாலிசி எடுக்கலாம். அதற்கு மாற்றாக முதிர்வு காலம் முடிந்த உடன் வட்டிப் பணம் அல்லது நிலம் வழங்கப்படும் என கூறப்பட்டது.
தனது முதலீட்டாளர்களிடம் நிலத்தில் முதலீடு செய்வதாகக் கூறி பணம் வசூலித்தது இந்நிறுவனம். அப்பணத்திற்கு 12 சதவீதம் வட்டி தருவதாகவும் வாக்குறுதி அளித்தது.
ஆனால், முதலீட்டாளர்களிடம் பணம் வசூலிப்பதற்கான உரிமையை அந்நிறுவனம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, இது தொடர்பாக செபிக்கும் இந்நிறுவனத்திற்கும் இடையே பிரச்சினை உள்ளது. சட்டத்துக்கு விரோதமாக திரட்டிய சுமார் ரூ.50,000 கோடியை பி.ஏ.சி.எல். நிறுவனம் உடனடியாக முதலீட்டாளர்களுக்கு திருப்பித்தரவேண்டும் என்று செபி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று சென்னை அயனாவரத்தில் உள்ள பி.ஏ.சி.எல். நிறுவனத்தை அதன் முகவர்கள் முற்றுகையிட்டனர். தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 10 ஆயிரம் கோடி பணத்தை ஏ.சி.பி.எல். நிறுவனம் மோசடி செய்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
முகவர்களின் இந்த திடீர் முற்றுகையால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவில் பல்லாயிரம் ரூபாய் கோடி பணத்தை சிட் பண்ட் நிறுவனங்கள் மோசடி செய்து அரசியல் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்திலும் அதுபோன்ற ஒரு புகார் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.