பால்காரர் முதல் பிளம்பர் வரை அனைவரையும் சந்தேகியுங்கள்... பெண்களுக்கு போலீஸ் அட்வைஸ்
சென்னை: பால்காரர் தொடங்கி பிளம்பர் வரை தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் அனைவரிடமும் பெண்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் சென்னையில் பல இடங்களில் காவல்துறை - பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குற்றச் செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் காவல்துறைக்கு இடையேயான நல்லுணர்வை மேம்படுத்தும் வகையிலும் இக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், நீலாங்கரைப் பகுதியில் ‘காவல்துறை- சீனியர் சிட்டிஷன் விழிப்புணர்வு' கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் எளிதாக ஏமாறும் விஷயங்கள் குறித்து அடையார் சரக காவல்துறை இணை ஆணையர் கண்ணன் விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெண்கள் தான்...
காலையில் பால்காரர் தொடங்கி, பேப்பர்காரர், பழைய பொருட்கள் வாங்குபவர்கள், குறிப்பாக ஒரு சேலைக்கு இரண்டு சேலை என்று பெண்களிடம் ஆவலை ஏற்படுத்தி விற்பனை செய்பவர்கள், வீட்டு வேலைக்கு வருபவர்கள், தண்ணீர் கேன் போடுபவர், மெக்கானிக், பிளம்பர்.... என்று பலரையும் நேரடியாகச் சந்திப்பவர்கள் பெண்கள்தான்.
முன்னெச்சரிக்கை தேவை...
எனவே இவர்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டுக்கு வருபவர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். வேலைக்கு வைப்பவர்கள் பற்றி போட்டோவுடன் கூடிய விவரங்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிக ஆபரணங்கள் ஆபத்து...
நகைகளை வீடுகளில் வைக்காமல் வங்கி லாக்கர்களில் வைப்பது பாதுகாப்பானது. திருமணம், கோயில் விழாக்கள் என்று போகும்போதும் அதிக அளவில் நகைகளைப் போட்டுச் செல்ல வேண்டாம். தங்கம் அதிகமாக அணிந்து கொண்டு கூட்டமான பேருந்துகளில் பயணிப்பதைத் தவிர்க்கவேண்டும்.
வீண் பேச்சுக்கள் வேண்டாம்...
ஆட்டோக்களில் செல்லும் போது வீட்டு விவரங்களையோ, வெளியூர் செல்வதையோ மற்றவர்கள் கேட்கும்படி பேச வேண்டாம்.
போலீஸ் பெயரில் மோசடி...
நாங்கள் காவலர்கள்தான். இந்தப் பகுதியில் கலவரமாக இருக்கிறது. நகைகளை அணிந்து செல்லாதீர்கள் என்று சில மூதாட்டிகளிடம் நகைகளைக் கழட்டி பத்திரமாக மடித்துத் தருவதாகக் கூறி அபேஸ் செய்த நிகழ்வுகளும் நடந்திருப்பதால், காவலர் என்று கூறினாலும் நம்பி விடவேண்டாம்.
குற்ற வழக்குப் பதிவு....
உஷாராக இருங்கள். இப்படியெல்லாமா நடக்கும் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளும் குற்ற வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கவனம் தேவை...
ஆண்களும் வங்கிகளுக்குச் சென்று பணம் எடுத்து வருகையில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கவனத்தை திருப்பி பணத்தை எடுத்துச் செல்லும் நோக்கில் சிலர் இருப்பார்கள். அதற்கு இடமளிக்கக்கூடாது.
தகவல் தெரிவிக்கவும்...
பல லட்சம் செலவு செய்து வீடு கட்டுபவர்கள், நல்ல கேட்டுகளையும் பூட்டுகளையும் பயன்படுத்துங்கள். திரைச்சீலைகளையும், சிசிடிவி கேமராக்களையும் பயன்படுத்துங்கள். அறிமுகம் இல்லாத நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ, தேவையற்ற வாகங்கள் நிறுத்தப்பட்டிருந்தாலோ அதுகுறித்து உடனடியாகப் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
கூடுதல் கவனம்...
வயது முதிர்ந்தவர்கள் யாராவது தனியாக வீடுகளில் இருந்தால் அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் பகுதியில் ரோந்து காவலர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். திருட்டு நடந்த பின் பாதிக்கப்பட்டுவிட்டேனே என்பதை விட முன்பே கவனமாக இருந்து காவல்துறைக்கு உதவினால் எந்தத் திருட்டுகளையும் நிறுத்திவிடலாம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துண்டுப் பிரசுரங்கள்....
இந்த நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்களோடு காவல்துறையினரின் தொலைபேசி எண்கள், முக்கிய தொலை பேசி எண்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.