சிரியாவின் ஜிகாத் பயிற்சியில் சென்னை கல்லூரி மாணவர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்
சென்னை: சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிரியாவில் இயங்கும் ஜிகாத் தீவிரவாத அமைப்பில் இயங்கி பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கப்பூர் புலனாய்வு மையம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சிங்கப்பூர் புலனாய்வு மையம் அளித்த தகவலில் கூறியுள்ளதாவது:
சிங்கப்பூர் புலனாய்வு நிறுவனத்திற்கு அந்நாட்டைச் சேர்ந்த ஹஜா ஃபக்ரூதின் உஸ்மான் அலி என்பவர் துருக்கி நாட்டின் வழியே சிரியாவுக்கு சென்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பெயரில், சிங்கப்பூர் புலனாய்வு மையம் நடத்திய விசாரணையில் பல்பொருள் அங்காடி ஒன்றின் மேலாளரான அலி என்பவர் அதிபர் பஷர் அல் அசாத் அரசு படைக்கு எதிராக செயல்பட்டு வரும் ஜிகாத் தீவிரவாத அமைப்பில் இருந்து இயங்கி சதி செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
கடலூரை சேர்ந்த நபர்
சந்தேகத்திற்கு உள்ளான அபுல் முகமது மராய்கர் என்ற மேலும் ஒருவர் ஃபக்ரூதின் அலியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
37 வயதுடைய முகமது மராய்கர் இந்தியாவில் உள்ள கடலூரை சேர்ந்தவர். சிங்கப்பூரில் உள்ள ஐபிஎம் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர் 2008- ம் ஆண்டு சிங்கப்பூர் அரசின் நிரந்தர குடியுரிமையைப் பெற்று, அதே வருடம் ஐபிஎம் நிறுவனத்திலிருந்து விலகி உள்ளார்.
சென்னை மாணவர்களுக்கு பயிற்சி
முகமது மராய்கர் 2007- ம் ஆண்டு மத பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கடலூர் வந்துள்ளார். பின்னர் 2013- ம் ஆண்டு சிரியா சென்று ஜிகாத் அமைப்புகளிடம் நிதி உதவிகளை பெற்ற பின் இந்தியா திரும்பிய மராய்கர் சென்னையில் மாணவர்களை ஜிகாதுக்கு ஈர்த்து செல்வதில் முனைப்பாக இயங்கி வந்துள்ளார் என்பது சிங்கப்பூர் புலனாய்வு துறை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜிகாத் அமைப்பில்
இதன் பின்னர் குல் முகமது மராய்கர் சிரியாவில் இயங்கும் ஜிகாத் தீவிரவாத அமைப்பில் தீவிரமாக இயங்கி வந்துள்ளது புலனாய்வு விசாரணையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மராய்க்கரும் ஃபக்ரூதின் அலியும் சிங்கப்பூரிலிருந்து கடந்த மாத வெளியேற்றப்பட்டனர்.
விசாரணையில் அதிர்ச்சி
இவர்கள் சிங்கப்பூர் புலனாய்வுத் துறையின் விசாரணையில் உள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த கல்லூரி ஒன்றிலிருந்து மாணவர்கள் ஜிகாத் பயிற்சிக்கு அனுப்பப்படுவதாக மராய்கர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் புலனாய்வு அமைப்பு
மேலும் சென்னையிலிருந்து அந்த இயக்கதிற்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர்கள் குறித்த எந்த விவரம் வெளியிடப்படாத நிலையில், இந்த விசாரணை குறித்து இந்திய அரசு தரப்பிற்கு சிங்கப்பூர் புலனாய்வு அமைப்பால் எந்த தகவலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.