சிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி!: மனைவியின் மனு ஏற்பு!!
சிதம்பரம்: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிரத்தினம் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள் மனு அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்பட்டது.
மணிரத்தினத்திற்கு 10 பேர் முன்மொழியாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு மனு தாக்கலின் போது 10 பேர் முன்மொழிய வேண்டும் என்ற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மாற்று வேட்பாளராக மனு அளித்திருந்த மணிரத்னத்தின் மனைவி சுதாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. எனவே சுதா தான் பாமகவின் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார்.
சிதம்பரம் தொகுதியின் காட்டுமன்னார்குடி அருகே உள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார் சுதா.
இந்த மணிரத்னம் சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து தாவி பாமகவில் இணைந்து உடனடியாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுதியில் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.