சிதம்பரம் அருகே வன்னியர் சங்க தலைவர் வெட்டிக்கொலை - போலீஸ் குவிப்பு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே வன்னியர் சங்கத் தலைவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது. இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பிற்காக இப்பகுதியில் போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது.
சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளம்பரிதி (35), வன்னியர் சங்க பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர். நேற்றிரவு சுமார் 1 மணியளவில் தனது நண்பர் பழனியுடன் புதுச்சத்திரம் சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் இளம்பரிதி.
வேலங்கிப்பட்டு கிராம எல்லையில் வந்தபோது இருளில் பதுங்கி இருந்த மர்ம கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளை வழி மறித்து இளம்பரிதி மற்றும் பழனியை சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே இளம்பரிதி பரிதாபமாக உயிரிழந்தார்.
மயக்கிய நிலையில் கிடந்த பழனியை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அக்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுச்சத்திரம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் சமய முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
கொலை செய்யப்பட்ட இளம்பரிதிக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.
இந்தப் படுகொலை காரணமாக அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. எனவே, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.