நான் ரீ கவுண்ட்டிங் அமைச்சர்னா... நீங்க என்கவுண்ட்டர் முதலமைச்சர்: மோடிக்கு ப.சி. பதிலடி
சென்னை: தம்மை ரீ கவுண்ட்டிங் (மறுவாக்கு எண்ணிக்கை) அமைச்சர் என்று விமர்சனம் செய்யும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை "என்கவுண்ட்டர் முதலமைச்சர்' என்று சாடியுள்ளார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
கடந்த லோக்சபா தேர்தலில் சர்ச்சைக்குரிய வகையில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார் என்பது பலரது புகார். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அத்துடன் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழகத்தில் பொதுக்கூட்டங்களில் பேசும்போது ப.சிதம்பரத்தின் பெயரை குறிப்பிடாமல் 'ரீ கவுண்ட்டிங் மினிஸ்டர்" என்று கிண்டலடித்து வருவது தொடர்கிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம்., நரேந்திர மோடி தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார். சிவகங்கை தொகுதியில் ஒருபோதும் மறுவாக்கு எண்ணிக்கையே நடைபெற்றது இல்லை.
என்னை மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் என்கிறார் மோடி. அவர்தான் 'என்கவுண்ட்டர் முதலமைச்சராக' செயல்பட்டு வருகிறார் என்றார்.