அரசு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துக்கு வேந்தர் ஆகும் ஜெயலலிதா
சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலை கழகம் அமைக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தில் அத்தியாயம் 3, பகுதி 9-ல் தமிழகத்தின் முதல்வராக இருப்பவர்கள் வேந்தராக இருப்பார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இப்பல்கலை கழகத்தின் வேந்தராக முதல்வர் இருப்பதால் அவரே தலைவராகவும் இருப்பார். மேலும் பல்கலை கழக பட்டமளிப்பு விழா நடக்கும் போது அவ்விழாவில் முதல்வர் பங்கேற்கும் போது அவரே விழாவை முன் நடத்தி செல்வார். பட்டங்கள், பட்டயங்கள், கேடயங்கள் மற்றும் கவுர டாக்டர் பட்டங்களை அவரே வழங்குவார்.
கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் இப்பல்கலை கழக இணை வேந்தராக இருப்பார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பல்கலைகழகத்தின் சட்ட மசோதா சட்ட சபையில் தாக்கல் செய்யப்பட்டு இது தற்போது சட்டமாக ஏகமனதாக நேற்று நிறைவேறியது.
இதன்மூலம் இப்பல்கலை கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழக உயர்கல்வி வரலாற்றிலேயே முதன் முதலாக செயல்படுத்தப்படுகிறது.
இது குறித்து கல்வியாளர்கள் கூறும் போது, முன்பு சில கவர்னர்கள் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் செய்ததை அடுத்து தமிழகத்தில் தற்போது நல்லாட்சி செய்து வரும் முதல்வராக ஜெயலலிதாவை வேந்தராக நியமித்தது தவறு இல்லை.
அவர் ஏற்கனவே கலைத் துறையை சார்ந்து வந்த காரணத்தால் வேந்தராக இருப்பது பொறுத்தமானது. இந்த பல்கலை கழக சட்டமானது வெறும் ஆரம்பமே தவிர வருங்காலங்களில் அனைத்து அரசு பல்கலை கழகங்களையும் முதல்வர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வேந்தராக கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்றனர்.