14, 700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெயலலிதா வழங்கினார்
சென்னை: கல்வித்துறை தொடர்பான நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆங்கில மொழி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையத்தை காணொலி காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த பள்ளியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 கணினிகள், பிரிண்டர்கள், நகர் இயந்திரம், எல்.சி.டி.புரஜக்டர் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
22 மாவட்டங்களில் அமைந்துள்ள, 76 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 81 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், சுற்றுச்சுவர், குடிநீர் வசதி, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டம், தரகம்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போடிச்சம்பள்ளியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதிரி பள்ளிக்கட்டிடம், அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள 186 அரசு பள்ளிகளில் 15 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 276 கூடுதல் வகுப்பறைகள்,
காஞ்சிபுரம் மாவட்டம் சிட்லபாக்கம் ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியம் ஆகிய இடங்களில் தலா 20 லட்சம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உதவி தொடக்க கல்வி அலுவலக கட்டிடங்கள், வேலூரில் 60 ல்டசம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தேர்வு துறையின் மண்டல அலுவலகக் கட்டிடம் என மொத்தம் 103 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியரிடையே அழகாக எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் 45 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி ஏடுகள், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 63 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு அவர்களது கலைத்திறன் மற்றும் கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவிய பயிற்சி ஏடுகள் வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள் போன்றவற்றை மாணவர்களும் பெற்றோர்களும் அறிந்து கொள்ளவும், ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக்கொள்ளவும் முதன்முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு அதாவது, பள்ளி டைரியுடன் கூடிய காலண்டர் ஆகியவை ரூ.8 கோடியே 10 லட்சம் செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கிணங்க இன்று 7 மாணவ, மாணவிகளுக்கு அடையாளமாக பயிற்சி ஏடுகள் ஜெயலலிதா கையால் வழங்கப்பட்டன.
ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 822 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.