சென்னை-பெங்களூர்- மைசூர் ரயில் திட்ட ஒத்துழைப்பு உட்பட சீனாவுடன் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
சென்னை: சென்னை- பெங்களூர்- மைசூர் நகரங்களை இணைக்கும் விரைவு ரயில் திட்டத்துக்கான ஒத்துழைப்பு உட்பட சீனாவுடன் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக சீன அதிபர் ஜின்பிங் வருகை தந்துள்ளார். முதல் நாளான நேற்று குஜராத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் முன்னிலையில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குஜராத் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஜின்பிங் தம்பதியர், டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இதே போன்று பிரதமர் நரேந்திர மோடியும் தனி விமானத்தில் டெல்லி சென்றார்.
டெல்லியில் ஜின்பிங்
டெல்லியில் இன்று ஜனாதிபதி மாளிகையில் சீன அதிபருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர்.
பிரதமருடன் சந்திப்பு
இதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங்- வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடைபெற்றது. அதன்பிறகு ஹைதராபாத் இல்லத்தில் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது.
பேச்சுவார்த்தை- ஒப்பந்தங்கள்
இந்த சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது. பேச்சு வார்த்தைக்கு பிறகு இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா - சீனா இடையே வர்த்தக மேம்பாடு, கலாச்சார பரிமாற்றங்கள், ரயில்வே துறையில் ஒத்துழைப்பை நீட்டிப்பது உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சென்னை- பெங்களூர்- மைசூர் ரயில் திட்டம்
ரயில்வே துறையில் சீன ஒத்துழைப்பு தொடர்பாக மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்து. இதில் சென்னை- பெங்களூர்- மைசூர் நகரங்களை அதிவிரைவு ரயில் திட்டம் மூலம் இணைப்பதும் அடங்கும்.
மானசரோவருக்கு புதிய பாதை
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா மற்றும் சீன வர்த்தக அமைச்சர் ஒப்பந்தங்களை பரிமாற்றிக் கொண்டனர். மேலும் மானசரோவருக்கு சிக்கிம் வழியா செல்லவும் ஒப்பந்தம் போடப்பட்டது.