"அம்மா சொல்லித்தான் எங்களுக்கே தெரிந்தது.. தடி எடுத்தவனெல்லாம்.."... சட்டசபையில் வறுபட்ட தேமுதிக!
சென்னை: தேமுதிகவை நேற்று முதல்வர் ஜெயலலிதாவும், அமைச்சர்களும் உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். தேமுதிக உறுப்பினர்களின் பேச்சுக்கு இடையே குறுக்கிட்டு முதல்வரும், அமைச்சர்களும் தேமுதிகவையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் விமர்சித்துத் தள்ளி விட்டனர்.
இவர்களின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்க வழியில்லாமல், அனுமதி இல்லாமல் போனதாலும், சரியான முறையில் பேசத் தெரியாததாலும் தேமுதிகவினர் திணறிப் போய் விட்டனர்.
தமிழக சட்டசபையில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அப்போது நடந்த விவாதம்....
விருத்தாச்சலம் முத்துக்குமார்
முத்துக்குமார் (தே.மு.தி.க.): கோர்ட்டுகளில் வக்கீல்களுக்கும் ஓய்வறை, நூலகம் கட்டப்பட வேண்டும். எனது தொகுதியில் நீதிபதியும் இந்த கோரிக்கையை வைத்தார்.
அமைச்சர் வேலுமணி: அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.240 கோடி ஒதுக்கியுள்ளார்.
முத்துக்குமார்: பெரும்பாலான சிறைகளில் போதுமான அடிப்படை வசதி இல்லை. கழிவறைகளை சுத்தப்படுத்தும் துப்புரவு பணியாளர்கள் இல்லை.
எந்த ஜெயிலுக்குப் போனார்
அமைச்சர் வளர்மதி- சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை என்று உறுப்பினர் கூறினார். அவர் எந்த சிறைச்சாலையை சுற்றிப்பார்த்து அதைக் கூறுகிறார். அல்லது அவரே சிறைக்குச் சென்றுள்ளாரா? என்பதையும் கூற வேண்டும்.
மோகன்ராஜுக்கு அனுமதி மறுப்பு
அப்போது, ஒரு ஒழுங்கு பிரச்சினை எழுப்பி பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார், எதிர்கட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் கோரினர். ஆனால் தற்போது ஒரு தே.மு.தி.க. உறுப்பினர் பேசுவதால், அதே கட்சியைச் சேர்ந்த மற்றொருவருக்கு அனுமதி தர முடியாது என்று அனுமதி தர சபாநாயகர் மறுத்துவிட்டார். எனவே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று அனுமதி கோரினர். ஆனாலும் அனுமதி தரப்படவில்லை.
எங்களுக்கு அனுபவம் இல்லை
அமைச்சர் வேலுமணி: அனைத்து வசதிகளையும் முதல்வர் ஜெயலலிதா செய்து கொடுத்துள்ளார். கைதிகளுக்கு கொலஸ்ட்ரால் வந்துவிடக்கூடாது என்ற அக்கறையில், சமையலுக்கு சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டுள்ளார்.
முத்துக்குமார்: சிறைச்சாலை சென்ற அனுபவம் எனக்கோ எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ இல்லை. ஏதாவது வழக்கில் சிக்கி சிறைச்சாலைக்கு சென்றவருக்கு அந்த அனுபவம் இருக்கலாம். எங்களுக்கு இல்லை.
கிழி கிழி என்று கிழித்தாரே ஜெயலலிதா
அமைச்சர் வளர்மதி: உங்கள் கட்சியினரின் யோக்கியதையைப் பற்றித்தான் போலீஸ்துறை மானிய கோரிக்கையின் போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிழி கிழி என்று கிழித்தெரிந்தாரே. அதைக் கேட்க முடியாமல் ஓடிப்போனவர்கள்தானே நீங்கள்.
தேமுதிக எதிர்ப்பு
அமைச்சரின் பதிலால் அதிருப்தி அடைந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கும் பதிலளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மோகன்ராஜ், சந்திரகுமார் கேட்டனர். ஆனால் சபாநாயகர் எழுந்து நின்று மறுப்பு தெரிவித்தார்.
அம்மா சொல்லித்தான் எங்களுக்கே தெரிந்தது
அப்போது அமைச்சர் வேலுமணி எழுந்து, நாகர்கோவிலில் உங்கள் தலைவர் என்ன செய்தார்? (தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அரசு வக்கீலுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம்). தே.மு.தி.க.வினர் மீது உள்ள குற்றங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறிய பிறகுதான் எங்களுக்கே தெரிய வந்தது. உங்கள் தலைவர் செய்த தவறு அது.
யாராக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் நீக்குவேன் - ஜெ.
முதல்வர் ஜெயலலிதா:- அ.தி.மு.க.வில் யாரும் தவறு செய்யவில்லையா என்று கேட்கிறார்கள். அ.தி.மு.க. உறுப்பினர் எவ்வளவு பெரிய பதவியில், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், தவறு செய்தால் உடனே கட்சியில் இருந்து உடனே நீக்கிவிடுகிறோம். உங்களைப்போல் தவறு செய்தவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு வக்காலத்து வாங்குவதில்லை.
தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்
அமைச்சர் வைத்திலிங்கம்: எதிர்க்கட்சி துணைத்தலைவர், சந்திரகுமார், பார்த்திபன், கோவிலுக்கு போய் வந்துள்ள உறுப்பினர் ஆகியோரெல்லாம் பல கட்சியில் இருந்து ஓடி வந்தவர்கள். ஆனால் எங்கள் கட்சித்தலைவர், ராணுவ கட்டுப்பாட்டோடு கட்சி நடத்துகிறார். உங்கள் கட்சியில் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாக இருக்கிறார்கள்.
முத்துக்குமார்: எங்கள் கேப்டனும், யார் தவறு செய்தாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிடுவார்.
எந்தப் பட்டாலியனுக்கு கேப்டன்...
அமைச்சர் வைத்திலிங்கம்: அவர் எந்த பட்டாலியனுக்கு கேப்டனாக இருந்தார்? உங்கள் கட்சியினர் பலர் மீது எப்.ஐ.ஆர். இருக்கிறது. ஏன் அவர்களை நீக்கவில்லை?
சாந்திக்கு அனுமதி
இந்த நிலையில் அதிருப்தி தேமுதிகவைச் சேர்ந்த உறுப்பினர் சாந்தி பேச அனுமதி கோரினார். அதை சபாநாயகர் அனுமதித்தார். ஆனால் இதற்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சபாநாயகர் இருக்கையை நோக்கிச் செல்ல முயன்றனர். இதற்கு அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பும் கைகளை நீட்டியபடி கடும் வாதம் புரிந்தனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
தலைவர் வழியில் தொண்டர்கள்
இதையடுத்து எழுந்த நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, யாரும் பேச வேண்டுமென்றால் சபாநாயகரின் அனுமதி பெற்று பேசலாம். உங்கள் கட்சியின் தலைவர் எவ்வழியோ அந்த வழியையே நீங்களும் பின்பற்றுகிறீர்கள். சபாநாயகரை கை நீட்டிப் பேசுவது, மிரட்டுவது போன்ற ஒழுக்கக்கேடுகளை செய்கிறீர்கள். சட்டசபையின் மாண்பையும், மரபுகளையும் மதித்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் எப்படி மக்கள் உங்களை புறக்கணித்தார்களோ அதுபோல உங்களை மக்கள் நிரந்தரமாக புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றார். அதற்கு முத்துக்குமார், மக்கள் பிரச்சினையை பேசும் இடம் சட்டசபை. அதைத்தான் செய்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அனைத்து சிறைச்சாலைகளிலும் கடந்த ஆண்டில் 69 கைதிகள் இறந்துவிட்டனர். இதிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றார்.
இயற்கை மரணத்தைத் தடுக்க முடியாது
அமைச்சர் வேலுமணி: தவறான தகவல். தி.மு.க. ஆட்சியில்தான் 432 பேர் சிறைகளில் இறந்தனர். தற்போது அது 200 ஆக குறைந்து உள்ளது. ஆனாலும் அவர்கள் நோய்வாய்ப்பட்டு, இயற்கையாகத்தான் மரணமடைந்தனர். அதை தடுக்க முடியாது. கடந்த ஆட்சியில் எங்களையெல்லாம் சட்டசபையில் இருந்து வெளியேற்றினர். அப்போது முதல்வர் ஜெயலலிதா தனி ஆளாக வந்து தைரியமாக பேசினார். அப்போது கருணாநிதி, புத்தகங்களை கொண்டு வரச்செய்து அதன் பின்னால் மறைந்துகொண்டார்.
கட்டப் பஞ்சாயத்து போல பேசக் கூடாது
முத்துக்குமார்: எனது கருத்தை அமைச்சர் திசை திருப்ப வேண்டாம்.
அவை முன்னவர்:- ஆதாரம் இல்லாமல் இங்கு குற்றச்சாட்டுகளை வைக்கக்கூடாது. கட்டப்பஞ்சாயத்து போல் இங்கு பேச முடியாது.
சபாநாயகர் தனபால்: முதலில் சட்டசபை விதிகளை படித்து பார்த்துவிட்டு வாருங்கள்.
அமைச்சர் வேலுமணி:- இந்த ஆட்சியில் 75 லட்சத்து 64 ஆயிரத்து 808 வழக்குகளில் 57 லட்சத்து 12 ஆயிரத்து 14 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
சட்டக் கல்லூரிகள்
முத்துக்குமார்: சென்னையைச் சுற்றி 3 சட்டக்கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்று நீதிபதி சண்முகம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார். ஆனால் அதில் நடவடிக்கை இல்லை. மற்ற மாநிலங்களில் அதிக அளவில் சட்டக்கல்லூரிகள் உள்ளன.
அமைச்சர் வேலுமணி: தமிழகத்தில் திருச்சி அருகே ரூ.100 கோடி செலவில் தேசிய சட்டப்பள்ளியை முதல்- அமைச்சர் ஜெயலலிதா கட்டியுள்ளார். போதுமான அளவுக்கு சட்டக்கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.