கோவை அருகே நடு ரோட்டில் கட்டுக்கட்டாக விழுந்த ரூ.15 கோடி வங்கி பணம்!
கோவை: கோவை அருகே ரூ.15 கோடி பணம் கொண்டு செல்லப்பட்ட வேன் ரோட்டில் கவிழ்ந்து பணம் ரோட்டில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் இருந்து ரூ.15 கோடி பணம் 6 பெட்டிகளில் ஏற்றப்பட்டு கேரள மாநிலம் திருச்சூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வங்கி அதிகாரி பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள், மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் வேனில் இருந்தனர்.
மதுக்கரை பாஸ்ரோடு, பாலத்துறை அருகே சென்றபோது, பாலக்காட்டில் இருந்து வந்த கார் ஒன்றின்மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பினார். இருப்பினும் எதிர்பாராதவிதமாக அந்த காரில் மோதி வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் லேசான காயம் அடைந்தார்.
கவிழ்ந்த வேனில் ரூ.15 கோடி பணம் இருந்ததால் வங்கி அதிகாரியும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சில கட்டுக்கள், ரோட்டிலும் சிதறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக சவுத் இந்தியன் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். கோவை புறநகர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் மதுக்கரை போலீசார் விரைந்து வந்து பணம் இருந்த வேனை சுற்றி நின்று பாதுகாத்தனர்.
பின்னர் வங்கியில் இருந்து மற்றொரு வேன் வந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரூ.15 கோடி பணப்பெட்டிகள் மற்றொரு வேனுக்கு மாற்றப்பட்டு திருச்சூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.15 கோடி பணம் இருந்த வேன் விபத்தில் சிக்கியது, கோவை புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.